வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.

இரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே மேலானது என நான் கருதுகின்றேன். 

தாய் மொழியில் கற்கும் சுக அனுபவமும் புரிதலும் வேற்றுமொழியில் கிடையவே கிடையாது.இதை மறுதலிப்பவர்கள் சுத்த முட்டாள்கள்.வரட்டுக்கௌரவம் கொண்டவர்கள் என்றே நான் கூறுவேன். தாய்மொழிக்கல்வியில் சிறந்த அபிவிருத்தியை பெற்ற தேசங்கள் நிறைய உண்டு.இதற்கு யப்பான் சீனா நாடுகள் சிறந்த உதாரணம் .

ஆங்கில அறிவு வேண்டும் அது ஒரு மொழிக்கல்வியாக கற்பிக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.அதற்காக தமிழ் மொழியில் கற்றவர்கள் நல்ல நிலையில் இல்லை வேலைவாய்ப்பில்லை என்று கூறுவதெல்லாம் யாரையோ திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் வாதங்கள்.

ஆங்கிலமொழிக்கல்வியை முற்றாக எதிர்பவர்களுக்கு எதிராக இங்கு கருத்துக்களை முன்வைப்பவர்கள் சரியாக காரணங்களை முன்வைக்கவேண்டுமே தவிர தாய்மொழிக்கல்வியையும் அதனை பெற்றவர்களையும் கொச்சைப்படுததும் வகையிலும் வாதம்செய்யக்கூடாது.

எனது குடும்பத்தில் சகலரும் தாய்மொழியில் கல்வி கற்பதையே ஊக்குவிப்பேன் அத்துடன் ஆங்கிலமொழிக்கல்வியை இரண்டாம் பாடமாக ஊக்குவிப்பேன்.அரசாங்கங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் பொதுநலன் அப்படையில் தான் திட்டங்களை முன்மொழியவேண்டும்.ஒரு சிலரின் நலன்களுக்காக தொழிற்பட முடியாது.

என்னைப்பொறுத்தவரை அரசுகள் தாய்மொழிக்ல்வியை ஊக்குவிகவேண்டும். இதேவேளை ஆங்கிலமொழிக்கல்வியை விரும்புவர்களின் உரிமையினை மதித்து சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் அவ்வளவுதான்.அதற்காக ஆங்கிலமொழிக்கல்வி தான் இனித்தேவை என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடாது


அனுபவத்தில் அறிந்த உண்மை தான் நான் கூறுவது என்னுடைய நண்பர்கள் மாணவர்கள் என்னுடைய ஆசான்கள் மூத்தவர்கள் மற்றும் நான் முன்மாதிரியாக பார்க்கின்ற மனிதர்கள் ஏன் கண்டுபிடிப்புக்களை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது சொந்த தாய்மொழியில்தான் தொடக்க கல்விபயின்றவர்கள். அவர்கள் எவரும் கெட்டலைந்துபோகவில்லை. 

தமிழ்மொழிக்கல்வியை வற்புறுத்துபவர்களை நாம் பிரித்துப்பார்க்கமுடியாது.குறிப்பாக அரசியல்வாதிகளை நாம் கணக்கில் எடுக்கவே தேவையில்லை அவர்கள் மக்களின் எண்ணஅலைகளுக்காக பேசுகின்றவர்களே தவிர அவர்களின் சொந்த வாழக்கைக்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எதையும் நாம் பகுத்தறியும் போக்கும் இருக்கவேண்டும். அவர்கள் ஆங்கிலமூல கல்வியை கற்றுவிட்டு பேசுகின்றார்கள் என்பதற்காக உண்மைகளை நாம் மறைக்கமுடியாது.

ஒரு தமிழராக உங்கள் மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஒன்றைப்பற்றி ஒரு வல்லுனர் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அதனையே தமிழிலும் அழகாக விளங்கப்படுத்துகின்றார் எனில் எது உங்களுக்கு கூடுதலாக புரியும் ?

 நான் கணினி படித்தேன் தொடக்கத்தில் ஆசிரியா் தமிழில் கற்பித்தார் மேற்படிப்புக்கு வரும்போது ஆங்கில மூலம் தான் கற்பிக்கப்பட்டது. எனக்கு நான் தமிழில் கற்றதை வித ஆங்கிலத்தில் கற்றதில் புரிதல் குறைவாக இருந்தது. அதேவேளை நான் சிறுவயதில் கற்ற ஆங்கில மொழி ஆங்கில மூலம் பின்னர் கற்க வழிசெய்தது. இப்போதும் தமிழில் நான் எனது மாணவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களுக்கு புரிகிறது. ஆங்கில மொழி மூலத்தில் பலருக்கு பரீட்சைக்கு விடை எழுதும்போது தெரிந்ததை எழுத முடியாமல் திணறுகின்றனர் இதேபோல தெரிந்ததை சொல்லமுடியாமல் திணறுகின்றனர். எல்ல வகையிலும் தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் கற்றல் நடவடிக்ககைகள் செய்யும்போது மனப்பாடம் தான் முன்னிலை வகிக்கின்றது. புரிதலுடன் கூடிய பிரயோகம் பின்னிற்கிறது.

சிறந்த வளவாளர்கள் இருந்தால் தாய்மொழிக்கல்வி சிறப்புப்பெறும்.அதற்கு தாய்மொழிப்புலமையுள்ள வளவாளர்கள் இல்லாமல் போவது தான் காரணம் ஆகமொத்தத்தில் தாய்மொழிக்கல்வி தரம் குறைவதற்கு வேற்றுமொழிக்கல்விதான் காரணமாகின்றது. அதற்கு தமிழர்களின் வரட்டு கௌரவம் வழிசெய்கிறது.

தமிழ்மொழிமூலக்கல்வி என்று சொல்வதை விட தாய்மொழிமூலக்கல்வி என்று கூறுவதே சிறந்தது. இன்று எமது மொழி சிதைக்கப்படுவதற்கு ஊடங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள்தான் பல்வேறுவழிகளிலும் மனங்களை மாற்றி ஏதோ ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமொழிக்கல்வி தான் எதிர்காலம் என்ற எண்ணத்தினை மாற்றாமல் விதைக்கின்றன. அவைமாறினால் தான் மனங்கள் மாறும்.இந்த நிலமை இந்தியாவில் கூடியதாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது நீண்டதூரம் பயணித்தும் விட்டது. இலங்கையில் அப்படிஒரு நிலை வரும் என்று நான் எண்ணவில்லை.

இது நிற்க ஆங்கிலமோழிமூலக்கல்வியை தெரிவுசெய்பவர்களது உரிமையினை மறுப்பதிற்கில்லை இது அவர்களின்விருப்பம். ஆனால் அது தான் இனி எதிர்காலம் அது அன்றி சாதிக்கமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம்.


தொடக்ககல்வியின் தரம் பேண நவீனம் புகுத்தப்படவேண்டும். அந்த நவீனம் ஆங்கிலமல்ல! தொழில்நுட்பம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றில் தான் அந்த தேவை உள்ளது இதை செய்யுங்கள். தரம் மேலோங்கும் . அதை விடுத்துஆங்கிலம் தான் வாழ்க்கையிலும் கல்வியிலும் நவீனம் என்பது சுத்த மடத்தனம்!

ஒரு கற்கைநெறியினை எந்த மொழியில் கற்றோம் என்பதல்ல பிரச்சனை அதை எந்தளவுக்கு புரிதலுடன் கற்று அந்த கற்கைநெறியின் இலக்கினை அடைந்தோம் என்பதுதான் பிரச்சனை இதனை ஒவ்வொருமட்டத்திலும் இருக்கின்றவர்கள் உணராதவகையில் ஆங்கில மோகத்தினை தடுக்கமுடியாது. இசைக்கு போல அறிவுக்கும் மொழி கிடையாது என்பதை நாம் உணரவேண்டும். இலகுவாக அறிவைப்பெருக்க வழியிருக்கையில் ஏன் இந்த மேட்டிமை மொழி மோகமோ!

தமிழை வாழ வைப்பதற்கும் தமிழில்(தாய்மொழி) கல்விகற்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது  மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியம் எ்னபது உண்மை அதற்கு ஆங்கில மொழியை நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசான்களை நியமியுங்கள் அதை விடுத்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவிக்கவேண்டாம்.உங்களுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்றால் வரவேற்றுக்கொள்ளுங்கள் .அது உங்கள் உரிமை இரண்டு மொழிக்கல்வியியும் அறிமுகப்படுத்தலாம் அதற்காக இப்படி தாய்மொழிக்கல்வியை கேவலப்படுத்தாதீர்கள்


ஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.

தவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே! மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி ,விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்படவேண்டும் .தவறான உறவுகளை காதல் வயப்படுதல்களை தடுக்கும் வகையிலான ஆக்கங்களையோ ,ஆய்வுகளையோ விழிப்புணர்வுப்பிரச்சாரங்களையோ அவைகள் சரியான முறையில் முன்னெடுப்பதில்லை . உதாரணங்களை பட்டியல்படுத்தும் கட்டுரைகளை தான் வெளியிடுகின்றன.

மைனர்களின் லீலைகள் இன்றுமட்டுமல்ல இங்குமட்டுமல்ல அன்றும் எங்கும் நடந்தவை நடப்பவைதான் அதை குறைக்க நிறைய வழிகள் உள்ளன.  கலாச்சாரம் கலை என்பன வேறு பதங்கள் இவற்றினை இங்கு கொண்டுவந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வுகளை செய்து வர படிப்படியாக தவறான நடத்தைகள் குறையும். மனித சமூகத்தில் அதனை அறவே அழிக்கமுடியாது.

ஒன்றை நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் நடந்தபின் இன்னொருமுறை நடாவாமல் இருப்பதற்குரிய வழிசெய்யப்படவேண்டும் தவிர இப்படியெல்லாம் செய்யலாம் என்ற தகவலை வழங்குவதாக அமையக்கூடாது.

ஆனால் ஒ்ன்றை அறிந்தவுடன் அனைத்தையும் செய்தியாக்குவதில் குறியாக உள்ளன.பாதிக்கப்படுபவர்கள் குறித்து துளியேனும் கவலைப்படுவதில்லை. மாணவி அல்லது மாணவன் என்று அடைமொழி வேறு போடுவார்கள்.படங்களையும் போடுகிறார்கள். கமெரொ தூக்கியவன் எல்லாம் ஊடகவியலாளன் அல்ல.ஊடகவியலாளர்களின் போக்கை பாரக்கும் போது செய்தி ஒன்றை வெளியிடும் நேர்த்தி குறித்து எந்த ஊடக பயிற்சிமையமும் பயிற்சிவழங்குவதாக உணரமுடியவில்லை!.

வடமாகாணதேர்தலுக்காக  தயவுசெய்து தமிழினைத்தின் கற்பை விற்காதீர்கள். உண்மையில் எங்கு  இனி நடக்கும் என்று அலைவதை விடுத்து அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். காவல்துறையும் அதைத்தான் செய்கிறது.கலாச்சார(?) காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா? செய்வார்களா? தண்டணைகளும் அவமரியாதைகளும் ஒரு போதும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை!

எதிர்ப்பரசியல் எதையும் தராது!

Posted by Thava வியாழன், 28 மார்ச், 2013 0 comments


தி.மு.க அரசியில் இருந்து விலகியிதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கேட்கும் கருணாநிதியின் கருத்துக்களில் சில நியாயங்களும் இருக்கத்தான் செய்கிறது. எவரும் இதய சுத்தியுடன் ஒன்றையும் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். யதார்த்தங்களை உணர மறுப்பதையும் நாம் அறிவோம். எமது பிரச்சனையினை தமது அரசியலுக்கு தேவையான அளவுக்கு இந்தியாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பயன்படுத்திவருகின்றமைதான் கண்கூடு. இதையே நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்

எது எப்படியிருப்பினும் 2009 இல் தி.மு.க வெளியேறியிருந்தால் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மையே தவிர இந்திய நடுவண் அரசு கவிழ்ந்திருக்கும் என்பது உண்மையில்லை.அதுதான் இம்முறையும் நடந்திருக்கின்றது.

ஆனால் இங்கு முகப்புத்தகங்களில் இந்திய ஊடகங்களில் எமக்கு தரப்படும் தகவல்கள் தி.மு.க விலகியிருந்தால் ஈழத்தில் கொடூரம் நடந்திருக்காது என்று கூறமுனைந்திருந்தன இந்த கருத்துக்களால் ஒருவகையில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இது நடுவண் அரசில் தி.மு.க வின் பலம்  குறித்தான எமது அறியாமையின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை இக்கருத்துக்களில் பல , கட்சி எதிர்ப்பரசியலை மையமாககொண்டவை என்பதே உண்மை.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கட்சிகள் இன்றும் தமிழீழ உணர்வலைகளை தேர்தலை நோக்கிய தமது  கட்சியரசியலுக்கு தாரளமாக பயன்படுத்திவருகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து தமக்கான ஆதரவுத்தளத்தினை வலுப்படுத்தி வருகின்றன.

இன்னும் ஒருநாட்டில் தனிநாடு அமைக்க அயல்நாட்டில் இருக்கும் மக்களால் முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு தற்போதுள்ள உலக அரசியல் போக்கு இடம்கொடாது என்பதுதான் உண்மை. ஒருவேளை  எங்களுக்கு ஒரு அரசியல்தீர்வினை பெற்றுக்கொள்ள இவர்களின் போராட்டங்கள் வழிவகுக்கலாம்.

இதை உணராமல் மேலெழுந்தவாரியாக எல்லாவற்றையும் எதிர்ப்போம் என இறங்கக்கூடாது என்பது என்கருத்து. எதையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தபின்னர் முடிவெடுக்கவேண்டும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக Airtel நிறுவனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடாத்தப்படுகிறது. அப்படிப்பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டும் இங்கு நாம் சகல தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டியிருக்கும். அதன்காரணமாக நாம் தொலைபேசி சேவையினை புறக்கணிக்க வேண்டியிருக்கும். அது எந்தவகையில் எமக்கு நன்மையினை தரப்போகிறது என சிந்தித்தால் ஒன்றும் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தக்கவை அவர்களது போராட்ட அர்பணிப்பினை பாராட்டத்தக்கவை. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் ஆரம்பத்தில் அமெரிக்க தீர்மானத்தினை ஒட்டியிருந்தபோதும் தற்போது ஒவ்வொரு முறையும் திசை திருப்பப்பட்டு புதிய புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது.அதனை அவர்களது ஒவ்வொரு தீர்மான அறிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன. இன்னமும் எது வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை காணமுடியவில்லை. அவர்கள் எத்தனை காலம் தமது கல்வியை போராட்டத்திற்காக அர்ப்பணிக்கமுடியும் எனபதும் இங்கு கேள்விக்குறி. முழுமையான போராட்டமாக அமையாமல் பகுதியான போராட்டமாக இனி இது அமைவதே சிறப்பானதாக இருக்கும்.மாணவர்கள் சரியான வகையில் வழிநடத்தப்படவேண்டும் இல்லாவிடில் அதன் பிரதிபலன் பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

இறுதியாக ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அமெரிக்காவும் தெற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவும் இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதற்கும் புலிகளின் தலைமையினை அழித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருவதிலும் குறியாக இருந்தன. அதை யாராலும் மறுக்கமுடியாது. இலங்கையில் பிரச்சனை இருக்கவேண்டும் என விரும்பும் இந்த நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தனிநாட்டுக்கோரிக்ககையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டா. யதார்தத்தினை உணர்ந்து தந்திரோபாய அரசியலை முன்னகர்த்தவேண்டும்.

ஈழத்தமிழரின் தனிநாட்டுக்கோரிக்கை உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இங்கு நாம் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் இன ரீதியான பாரபட்சங்களுக்கும் எதிராக குரல்கொடுத்து எமது உரிமைகளை பெற இயலுமான சாத்தியமான வழிகளில் முயற்சிக்கின்றோம். இனரீதியாக பல இடங்களில் நாம் சீண்டப்படுக்கின்றமையும் உண்மை. அது தற்போது இலங்கையில் முஸ்லிம்களின் பக்கம் கூடுதலாக திரும்பியிருக்கிறது.அதனை அந்தச்சமூகம் கூட விரைவில் உணரும்.இங்குள்ளவர்களின் மனதில் மட்டும் உள்ளதை அயல்நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்பவர்கள்  வெளிப்படையாக தனிநாட்டுக்கோரிக்கையாக முன்வைத்தவண்ணம் உள்ளனர். இதில் எதுவும் இறுதி இலக்கினை உடனடியாக அடையப்போவதில்லை என்பதே யதார்த்தம். மனிதரை மனிதன் மதிக்கும் மனப்பாங்கு சகலரிடமும் உருவாகும் வரை போராட்டங்கள் தொடரும்.வருடங்களும் நகரும்.ஆம் புன்னகை எங்கே மறுக்கப்படுகின்றதோ அங்கே போர் தொடங்குகிறது என்பதை சகல அரசுகளும் உணரவேண்டும்

எது எப்படியோ 2009 நடந்த துயரச்சம்பவங்கள் எம்மிடமிருந்து மறந்துபோக நிறைய வருடங்கள் எடுக்கும். அதை மறப்பதற்கு அரசு விடுமா என்பது தான் இப்போதுள்ள கேள்விக்குறி. அரசின் வெற்றிக்கொண்டாட்டங்கள் நினைவுச்சின்னங்களே எமக்கு அவற்றினை நினைவுபடுத்துகின்றன என்பதை அரசு உணர மறுக்கிறது.நாம் அதை மறந்தால் அரசு சீண்டுவதை நிறுத்தினால் நிச்சயம் நல்லிணக்கம் மலரும். இதனை போராட்டங்களை செய்வோர் முக்கியமாக வலியுறுத்தவேண்டும். அதற்காக முற்றுமுழுதான எதிர்ப்பரசியல் எதையும் தராது.

நன்றும் தீதும் பிறர் தர வாரா!

Posted by Thava வெள்ளி, 11 ஜனவரி, 2013 0 comments


சவூதியில் பணிப்பெண்ணாக கடமையாற்றி சிசுவொன்றை கொலை செய்ததாகத் தெரிவித்து மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையின் ரிசானா நபிக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டடது இன்று சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விடயமாக உள்ளது. பல்வேறு தரப்பினராலும் கண்டணத்திற்குள்ளாகிய விடயமாகவும் உள்ளது.

2005 ஆம் ஆண்டு தனது வேலைதருனர்களின் குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டு சவுதி அரேபியாவின் தவாத்மி பிரதேசத்தில் சிறை வாசம் அனுபவித்து வந்த ரிசானாவின் விடுதலைக்காக பல தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு கோரிக்கைகளை முன்வைத்த போதும் 9.1.2013  காலை ரிசானா நபீக்கிற்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

.இவ்விடத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்பு மட்டுமே அவரைக்காப்பற்றியிருக்கக்கூடிய விடயமாக இருந்தது. சிசுவின் தந்தை மன்னித்திருந்தபோதிலும் தாய் மன்னிக்கவில்லையாம் உண்மையில் அந்த தாயின் கல்நெஞ்சமே அந்த தண்டனை நிறைவேற்றத்திற்கு முழுமுதல் காரணம் ஆகும் என கூறப்படுகிறது

ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது . ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார் என முஸ்லிம் அடிப்படை வாதிகள் கூறுகின்றனர்

அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.என்று அவர்கள் ஆறுதல் சொல்கிறார்கள்

18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல்  என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும் என அந்த முஸ்லிம் அடிப்படைப்படைவாதிகள் கருத்துத்தெரிவிக்கின்றனர். 

வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாபப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர் எனஅவர்கள் கர்ஜிக்கின்றனர்.

இது இப்படியிருக்க


முஸ்லிம்களின் சட்டம் என்ன சொல்கிறது ? கொலைக்குற்றத்திற்கு மரணதண்டணை என்று தானே! அத்துடன் மன்னிப்பினை பாதிக்கப்பட்டவர் வழங்குவதையும் வரவேற்கிறது என்பதும் புலனாகின்றது. இந்நிலையில் சட்டம் தவறிழைக்கவில்லை அது தவறாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதே இங்கு வெளிப்படை.

றிசானா கொலை செய்யவில்லை என அப்பட்டமாக தெரிகிறது. அவள் கொலை செய்யவேண்டிய அவசியமும் இல்லையே!   இப்படியிருக்க ஏன் முஸ்லிம்களின் சட்டம் முஸ்லிம் பெண்ஒருவர் மீது பிழையாக பிரயோகிக்கப்பட்டுள்ளது என எனக்கு இன்னும் புரியவில்லை.மனதைக்குடைகிறது. திட்டமிட்ட கொலைக்கும் தற்செயலான கொலைக்கும் வித்தியாசம் காணமுடியாத ஒரு சட்டமாக இவர்களின் சட்டம் இருக்கிறன்றதா என்பது எனது கேள்வி!

ஆரம்பத்தில் நான் அவள் ஒரு சிசுவை கொன்றுவிட்டாளே என எண்ணியதுண்டு. வைத்து இழுத்தடிக்காமல் உரிய தண்டணையினை வழங்கிவிடவேண்டியதுதானே என எண்ணியதும் உண்டு. ஆனால் எல்லாவற்றினையும் ஆராய்ந்து பார்க்கும் போது மிகவும் வேதனையளிக்கிறது. மரணதண்டனை அளிக்கும் விதம் அதன் பின்புல பாடல் மற்றும் அவளது கைப்பட எழுதிய கடிதம் என்பன கோபத்தினையே வரவழைக்கிறது!

இந்த விடயத்தில் சமூக அக்கறையானது மிகவும் காலம்தாமதமாக எழுப்ப்பட்டுவிட்டதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.


இந்த விடயத்தில் அசமந்தமாக தொழிற்பட்டுவிட்டதாக இலங்கையரசினை குறைகூறுவதில் பல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவள் வேலைக்கு செல்ல வேண்டிய சந்தர்ப்பத்தினை நாட்டியில் ஏற்படுத்தியிருந்ததை தவிர விடுதலை மற்றும் மன்னிப்பு விடயத்தில் தன்னாலான முயற்சிகளை அது எடுத்திருந்தது என்றே அறியமுடிகிறது. சவுதி அரசின் சட்டதிட்டங்களுக்கு அப்பால் அவர்களால் செல்லமுடியாது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

எந்த தண்டனையும் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் வழங்கப்படுவது,அதை நியாயப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. இந்து மதத்தில் கூட சில மூடர்களால் மிருகபலிகள் செய்யப்படுகின்றன. ஆனால் அது மதத்தில் அறிவுறுத்தப்படாதவை. அதற்காகாக இந்து மதத்தினை குறை சொல்ல முடியாது.

நாகரீகமடைந்த இந்த உலகில் இன்னும் மதத்தின் பெயரால் நடைபெறும் காட்டுமிராண்டித்தனங்கள் கண்டிக்கப்படவேண்டியவை! இந்நிலையில் நாம் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சட்டங்களை பிரயோகிப்பவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது மேல் !. என்னைப்பொறுத்தவரை சட்டம் பிழையாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றதே தவிர சட்டத்தினை குறைகூற முடியாது என்பதேயாகும். இருந்தபோதிலும் அப்படி சட்டம் பிழையாக பிரயோகிக்கப்பட்டதிற்கு அந்நாடும் நாட்டு மக்களும் பொறுப்பாகிவிட்டமையினையும் மறுக்கமுடியாது!

பணம் என்ற ஒன்றுக்கானத்தான் எல்லாம் இங்கு அரங்கேறியிருக்கிறது. அளவுக்கதிகமாக ஆசைப்படாமல்  கிடைப்பதை கொண்டு சிறந்த வாழ்க்கையினை வாழப்பழகிக்கொள்ள வேண்டும். என்னவளம் இல்லை நம் திருநாட்டில்? என்பதுதான் என் கேள்வி இப்போது. 

நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு சிறந்த கல்வி இவற்றினை நோக்கி பயணித்தால் நிச்சயம் இவ்வாறான பொறிகளுக்குள் செல்லவேண்டிய அவசியம் இருக்காது!. நாம் நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டிருப்பதை விட்டு நாட்டுக்கு என்ன செய்தோம் என எண்ணினால் பல கேள்விகளுக்கு விடை பிறக்கும் 

சகோதரி றிசானாவின் ஆத்மா சாந்தியடையட்டும் அவள் கண்ட கனவு நனவாகட்டும்! அததற்கு நாம் அனைவரும் எம்மாலான முயற்சிகளை எடுத்து இனிவரும் காலங்களில் இப்படியான உயிரிழப்புக்களை தவிர்ப்போம்!

நன்றும் தீதும் பிறர் தர வாரா!



றிசானாவின் கடிதம்


சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்படும் முறை
(இது 2011 ம் ஆண்டு இந்தோனேசிய பெண்மணிக்கு வழங்கப்பட்ட காட்சி)




றிசானா பற்றிய மேலதிகவிபரங்கள் இக்பால் செல்வன் அவர்களால் தொகுக்கப்பட்ட விடயங்கள் அவரது வலைப்பதிவில் 


இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தான் ஆட்சியைக்குறிவைக்கும் அரசியல் கூட்டமைப்புக்கள் உள்ளன .அவை நிரந்தரமானவையல்ல. கொள்கைப்பிடிப்புள்ள முற்றிலும் நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்புடன் கூடிய கட்சிஅமைப்பு கட்டியமைக்கப்படவேண்டும்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் எந்த ஒரு நிரந்தரமான கொள்கைகளையும் கொண்டிராத ஒரு குழு. முதலில் ஒரு கட்சி அமைப்புக்கு அவர்கள் வரவேண்டும் . அதன் பெயர் கூட்டமைப்பாக இருந்தால் அதற்கு நிரந்தரமான கொள்கைத்திட்டங்கள் இருக்கவேண்டும். தலைவர் சரி இல்லாவிடில் கூட நீக்கக்கூடிய சிறந்த யாப்பு தேவை!

ஒவ்வொரு பங்காளிக்கட்சியும் தமது கட்சிகளையும் வளப்படுத்தக்கூடிய நிலை இருக்கக்கூடாது இது நிறுவனத்தின் பாதையினை ஒருநிலையில் கட்டாயம் சீர்குலைக்கும். இதயசுத்தி இருக்காது. ஒன்றுபட முடியாது என்றால் விலகி ஒரு புதிய நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்சியை உருவாக்கவேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரே உண்மையில் மாயையானது இன்று யாரும் அதன் தலைவர் என்று கூறமுடியும் சட்டச்சிக்கல் எதுவும் இல்லை.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என தேர்தல் திணைக்களத்தில் பதிவு இல்லை பத்திரிகை செய்திகள் அறிக்கைகள் மாத்திரமே இதனை கூறி வருகின்றன இன்றுவரை தமிழரசுக்கட்சிதான் தமிழ் கூட்டமைப்பாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. வாக்குச்சீட்டில் கூட தமிழரசுக்கட்சிதான். வீடுதான் அதன் சின்னம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் என்று ஏதாவது ஆவணம் உண்டா ?இந்த மாயையினை பலர் வில்லங்கமாக மறைக்கின்றனர் இதற்கு முடிவுகட்டப்படவேண்டும்.இல்லாத ஒன்றை கட்சியாக உருவகித்து வரும் நாம் ஒருவகையில் மன நோயாளிகள் தான்.

இங்கு எமது மனதுக்குள் உணர்வு இருந்தாலும் எமக்கான தீர்வு ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் அமையமுடியும் இதுதான் சாத்தியமானதும் கூட. இந்நிலையில் வெறுமனே புலம்பெயர் சமூகத்திற்கு ஒரு முகமும் அரசுக்கு ஒரு முகமும் எமக்கு ஒரு முகமும் காட்டும் இந்த கூட்டமைப்பின் பழுத்த கோமாளிகள் முதலில் தமது கொள்கைகளினை விளக்கி தமிழ் தேசிய அரசியல் கட்சியொன்றை பதிவுசெய்யவேண்டும்.

ஒன்றுமில்லாத ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டக்கூடாது. தேர்தலுக்குமட்டும் எமது உணர்வுகைளை விலைபேசி மடையர்களாக்கமுடியாது. சங்கரி போன்ற வெளியிலே உள்ள அரசியல்வாதிகளும் இவர்களை விட வித்தியாசமானவர்கள் இல்லை என்பதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன். வீட்டுச்சின்னத்தில் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் தாங்கள் புலிகளால் அங்கீகரிக்கப்பட்ட புனிதர்கள் என்று கூற விளைவது சுத்த முட்டாள்தனம். காலம் மாறிவிட்டது இனி புதுசா சிந்திக்கவேண்டும் பழைய பதிப்புக்கு பக்கவாத்தியம் பாட நாம் முட்டாள்கள் இல்லை.

நாம் எல்லாம் தெரிந்துகொண்டு ஏதோ ஒரு மாயைக்குட்பட்டு ஒன்றின்பின் தொடர்ந்து சென்று கொண்டிருப்பது தான் சரியாகப்படவில்லை.மாற்றத்தினை உள்வாங்க வேண்டும் அல்லது மாற்றப்படவேண்டும் சரிவராவிடில் மாற்று அணிதான் வழி!

எம்மில் பலர் புதிய மாற்றத்திற்கு தயாரற்றவர்களாக தமிழ் தேசிய அரசியலின் பழைய பதிப்பொன்றுக்கு பின் நின்று கூவிக்கொண்டிருக்கின்றோம். அதில் பிழைகள் இருக்கும் தருணங்களில் எல்லாம் விடுவோம் என்று அலட்சியமாக இருந்து வருகின்றோம். புதிய ஒன்றினை தெரிவு செய்ய தயக்கம் காட்டுகின்றோம். தொழில்நுட்பத்தில் மாத்திரம் தான் புதியனவற்றை தேடுகின்றோம்.அந்த நிலை மாற்றவேண்டும்.

ஒவ்வொரு தேர்தலிலும் ஆணை கேட்டுகொண்டு வெறும் சூதாட்டமாக நடைபெறும் தேர்தல் அரசியலில் நமது வாக்குரிமை ஜோக்கராக பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது.சர்வதேசத்திற்கு ஒற்றுமையினைக்காட்டுகிறோம் என்று கூறி பல இறுதிச்சந்தர்ப்பங்களை வழங்கியும் மாற்றம் எதுவும் இல்லை. சாதாரண அபிவிருத்தி மட்டும்தான்.கிழக்கு மாகாணம் சில செய்திகளை சொல்லிவிட்டது. வடக்குமாகாணமும் சொல்லபோகிறது.

தேசியம் வாக்கு சிதறடிப்பு அது இது என்று ஏதேதோ பிதற்றுகின்றோம். மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவும் அவர்களுக்கான தெரிவுகளை போதியளவு வழங்கவும் நமது தமிழர் அரசியல் வளரவில்லை. ஆனால் தென்னிலைங்கையில் நிலமை வேறு. இங்கே அரசுக்கும் தமிழ்த்தேசியம் பேசுவேருக்குமான மாற்று அணி வலுவான நிலையில் இல்லாமையே அதற்கு காரணம். தொடர்ந்து பாராளுமன்ற ஆசனம் என்ற கனவுதான் தமிழ்த்தேசிய சந்தர்ப்ப வாத அரசியலில் இருக்கிறது. மக்களுக்கான தீர்வு குறித்து யாரும் சிந்திக்கவில்லை.

மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று ஒரு கட்டமைப்பு நிஜமாக உள்ளதா? ஒருமுடிவை கலந்து பேசி வாக்கெடுப்பு நடத்தி எடுக்கிறார்களா? அது ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் குரலாக இருக்கிறதா? விஞ்ஞான முறையில் புள்ளிவிபரங்களை எடுத்து நோ்க்கின் தேர்தலை புறக்கணிப்போர் வாக்களிப்போர் வாக்களித்தவர்களில் எத்தனைபேர் கொள்கைக்கு எத்தனைபேர் கட்சிக்கு எத்தனைபேர் சின்னத்துக்கு எத்தனைபேர் எழுந்தமானமாக வாக்களித்தார்கள் என்றால் அரச அரச சார்பற்ற தமிழ் கட்சிகள் எதுவும் தேறாது! தென்னிலங்கை நிலை முற்றிலும் வேறுபட்டது

முதலில் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் சீரமைப்பு கூட்டம் கூட்டப்படவேண்டும் அதில் சகல தமிழ் தேசியத்ததினை ஆதரிக்கும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் பிரதிநிதிகள் அழைக்கப்பட்வேண்டும் அதில் ஒவ்வொரு கட்சியும் குழுக்களும் தமது கொள்கைகளினை வெளிப்படுத்தவேண்டும் அதில் இடைக்கால நிர்வாகம் தெரியப்பட்டு கட்சி யாப்பு உருவாக்கவேண்டும் அதன்படி புதிய நிர்வாகம் தொழிற்படவேண்டும் அது பதிவுசெய்யப்படவேண்டும் தேர்தலுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதுவும் சரிவராது. உடனடி புனருத்தானம் இப்போது தேவை! காலம் பொன்னானது

இந்த மாற்றத்திற்கு யாரும் தயாராகாது விடில் உடன்படும் உணர்வுள்ள அரசியல் வாதிகளை ஒன்று சேர்த்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றே புதிய கட்சியை உருவாக்கவும் முடியும் அதன்போது சில கட்சிகள் ஒதுக்கப்படும் வாய்ப்புக்களும் உள்ளன. அதன்போது சின்னம் பிரச்சனை வரும்! என்னைப்பொறு்த்தவரை சின்னம் மாற்றினால் பிரித்தறிய முடியாத முட்டாள்களாக மக்களை கருத முடியாது! என்றே நினைக்கின்றேன்

நாம் 60 ஆண்டுகளாக அடைய முடியாததை இனியும் அடையலாம் என்று கனவுகாண முடியாது . அதற்கான அரசியல் களநிலை இனி ஒருபோதும் அமையப்போவதில்லை. அதற்கான வெளிக்கள நிலைகளும் இல்லை.அதனின்றும் விலகி ஒரு ஒன்றுபட்ட தீர்வினை அடைவது சாத்தியமே. சரித்திரப்புத்தகத்தில் தான் படையெடுப்புக்கள் வெற்றிகள் பற்றி படித்திருக்கின்றோம் அவற்றின் காலப்பகுதிகள் மிக மிக குறைவு இங்கு நடைபெற்றது நீண்ட காலம். இவ்வளவு பலத்துடன் கட்டுக்கோப்புடன் இருந்த நம்மால் முடியாமல் போன விடயத்தினை இந்த கட்டுக்கோப்பில்லா பழைய கோமாளிகளைக்கொண்டு அடைந்துவிடலாம் என்று எண்ணுவது தவறு. மீண்டும் ஒரு 60 வருடம் தேவையா?

நாம் அடைய எத்தனிக்கின்ற எமக்கான சமாதான தீர்வுக்கான பாதையில் கட்டுக்கோப்பான ஜனநாயக கட்சி ஒன்றினை உருவாக்கி அதன் கீழ் போகவேண்டிய தேவையில் உள்ளோம். ஒருவருக்கும் சோரம்போகாமல் எந்த வொரு சலுகைக்கும் விலைபோகாமல் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போது குரல்கொடுக்கக்கூடிய தாக அக்கட்சி அமையவேண்டும். பழையது வரலாறு அதை மாற்றமுடியாது.புதியதை புதிய வழியில் எழுதவேண்டும்.

புலம்பெயர்ந்தவர்கள் அரசு மற்றும் இங்குவாழும் மக்கள் ஆகிய 3 பிரிவினரும் செல்லும் பாதைகள் வித்தியாசமாக உள்ளன அவை ஒருமுகப்படுத்தப்பட்டு உண்மையில் எது சாத்தியமோ அதனை அடைவதற்கு நாம் பாடுபடவேண்டும். இளைஞர்கள் நேர்மையானவர்கள் எதுவும் உண்மையாக இருக்கவேண்டும் என எண்ணுபவர்கள் அவர்களை உசுப்பேத்தி உணர்ச்சி அரசியலுக்குள் விழுத்தி எம்மை நாம் சிதைக்க கூடாது என வலம்புரி ஆசிரியர் தலையங்கத்தில் எழுதப்பட்ட கருத்து மிகப்பொருத்தமானது. நாமே நமது மக்களின் குரல்களை அவர்களுடைய கருத்து தெரிவிக்கும் உரிமையினை முடிவுகளை எடுக்கும்போது அவர்களின் பங்கினை மறுக்கும் போது இன்னொரு இனத்தின் கட்சி யிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.

ஒன்று மட்டும் தெரிகிறது ஏன் இவர்கள் இப்படி ? கட்சிப்பதிவுக்கான ஆவணங்களை தயார் செய்ய முடியாத அளவுக்கு தலைவர்கள் இயலாதவர்களா? போன்ற கேள்விகள் பங்காளிகட்சிகள் பலரிடம் எழுந்திருந்தும் கட்சித்தலைமைக்கு கட்டுப்படுகின்றோம் என்று வாழாவிருக்கிறீர்கள். பல இடங்களில் இப்படி அனைவரும் வாழவிருந்ததன் விளைவு இப்போது சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் தனிப்பட்ட முடிவுகளில் கட்சி செல்கிறது

அரசியல்கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்களை தயார் பண்ணமுடியாதவர்கள் எப்படி தீர்வுத்திட்டத்திற்கான ஆவணங்களை தயாரிப்பார்கள் .அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் எங்கே இதைக்கேட்கப்போய் அடுத்தமுறை நமக்கு நமது சிபார்சுகளுக்கு இவர்கள் ஆப்புவைத்து விடுவார்களோ என்ற பயத்தில் தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கின்றனர் இந்த நிலை மாறவேண்டும் மக்களுக்கு பதில்சொல்லக்கூடிய கட்சித்தலைமை வேண்டும் எங்களுக்கு ஒருமுகம் தமிழீழம் கோருவோருக்கு ஒருமுகம் அரசுக்கு ஒரு முகம் காட்டக்கூடாதல்லவா?

சும்மா வாக்கு வங்கி கூட்டுதல் பற்றி சிந்திப்பதற்கு முதல் அந்த வாக்குகளுக்கான பதிலையும் கூற கட்சி தயாராக இருக்கவேண்டும் வாக்கு வங்கிக்கு மட்டும் பாராளுமன்ற ஆசனங்களுக்கு வலுசேர்க்க மட்டும் மக்கள் இல்லை. தெரிவுசெய்யப்படும் வேட்பாளர்கள் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள் நிறுவன கட்டமைப்பின் ஊடாக தெரிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும். இப்போது தெரிவுசெய்யபட்டருக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் இதயசுத்தியுடன் தொழிற்படவில்லை.அவர்களி்ன் தெரிவு கூட்டமைப்பு என்ற உருவகிக்கப்பட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு மக்கள் வாக்களித்ததன்பேரில் நடைபெற்றதே விர வேறொன்றும் இல்லை

கூட்டமைப்பினை உருவாக்கியபோது பின்புலத்தில் புலிகள் இருந்தனர் அவர்கள் சொன்னதை இவர்கள் கேட்டார்கள் . அப்போதும் சில தவறுகள் இடம்பெற்றிருந்தது அதனாலேயே இராஜதந்திர அரசியல் தோற்றது இப்போதும் தோற்கிறது. எப்போது போராட்டம் மற்றும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுகிறதோ அப்போதுதான் வெல்லும்.

விடுதலைப்புலிகளால் கூட குறுகியகாலத்தில் தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிக்க முடிந்திருக்கிறது. பழுத்த அரசியல்வாதிகளால் அது முடியாமல் இருப்பது வியப்பிற்குரியது.மகிந்தவிடம் எப்படி தீர்வுத்திட்டம் இல்லையோ இவர்களிடமும் தீர்வுத்திட்டம் இல்லை.

இந்த வகையில் நாம் எம்மை சுய பரிசீலனை செய்யவேண்டும்.கட்டமைப்புள்ள கட்சி சின்னம் யாப்பு தலைமைச்செயலகம் என வளர்ச்சியடைய வேண்டும். பாரம்பரிய சுதந்திரக்கட்சி வெற்றிலையில் ஒன்றிணைந்து வெற்றிபெறமுடியும் எனில் தமிழரசுகட்சி கூட்டமைப்புக்குள் முழுமையாக இணைந்துகொள்வதில் தடையில்லை.
தவறின் மக்களின் தேர்தல் புறக்கணிப்பு மற்றும் தமிழ் அரசியல் தோல்வி என்பன தவிர்க்கப்பட முடியாது. புதிய மாற்றுக் கட்சி ஒன்றுக்கான ஏது நிலையினையும் அதிகரிக்கும்.மக்கள் விழித்துவிட்டனர் வடக்கு தேர்தலை நிறுவன கட்டமைப்புடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிடில் தோல்வி தவிர்க்க முடியாது! தேர்தல் மட்டும் அரசியல் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது!


நான் ஒரு தீவிர தமிழ் இன விடுதலை ஆதரவாளன் தமிழ் கலாச்சார பிரியன் என்பதை பயமின்றி தெரிவித்துக்கொண்டு மேலும் தொடர்கின்றேன். இல்லையென்றால் என்னை அரசாங்கத்தின் ஆள் அல்லது நிகழ்வினை ஒழுங்குசெய்தவரின் ஆள் என்று சொல்லி விடுவார்கள் :-) மேலும் இந்நிகழ்வில் எந்தவகையிலும் பங்கு எடுக்காதவன் என்ற வகையிலும் பழையமாணவன் என்ற வகையிலும் துடுப்பாட்டம்பற்றி அதிகம் அறிவில்லாத பொதுசனம் என்ற வகையிலும் கருத்துக்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

நிகழ்வினை ஒழுங்குசெய்த நபர் முற்று முழுதாக துடுப்பாட்ட வளர்ச்சியை நோக்காகக்கொண்டு இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்யவில்லை என்பது வெளிப்படையான ஒன்று .அவரை கல்லுாரியின் பழைய மாணவன் என்ற வகையில் தெரியும் என்றாலும் அவரது எல்லா நடவடிக்ககைகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன அதில் முக்கியமான ஒன்று நுண்ணரசியல். அதை விடுவோம்..அதற்காக அவருக்காக இந்நிகழ்வினை எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அப்படிப்பார்த்தால் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வாதிகள் கூட தமது இருப்புக்காகத்தான் பலதை செய்கின்றனர். யாழ் இந்துக்கல்லூரி மைதானத்தில் நடந்த பொது நிகழ்வு ஒன்றில் நடனமங்கையர் ஆபாசம் இல்லாமல் ஆடியது கூட குற்றமில்லை என்பதை தப்பு என்று பலர் கூறுகின்றனர். அதற்காக ஒழுங்கு செய்தவர்களை இப்படி கட்டம் கட்டி அடிப்பது அநியாயமாக படுகிறது. நானும் சொல்கின்றேன் அது ஒரு பொது நிகழ்வு அதில் ஒரு வித்தியாசமாக நடனமங்கையர் ஆடினர் ஆபாசம் இருக்கவில்லை உடுப்பை கழற்றிவிட்டும் ஆடவில்லை. இதில் என்ன கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று நானும் கேட்கின்றேன்.

முதலில் இதுபற்றி முகப்புத்தகத்தில் ஆங்காங்கே விமர்சனங்களை முன்வைக்கும்  உங்கள் அனைவரிடமும் கேட்பது ஒன்று தான். தமிழ் கலாச்சாரம் தமிழ் இன விடுதலை என்றெல்லாம் பேசுகிறீர்க்ள் உங்கள் யாருக்காவது தமிழர்களுடன் தமிழி்ல் உரையாடி மொழி வளர்க்கவேண்டும் என்று ஆர்வம் இருக்கிறதா? மனதைதொட்டுச்சொல்லுங்கள் உங்கள் வியாக்கினங்களை ஆங்கிலத்தில் பிதற்றி யாரை ஏமாற்றுகின்றீர்கள்.? உங்களுக்கு உங்கள் சொந்த திறமையினை பறைசாற்றவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றதே தவிர தமிழ் உணர்வு மேலோங்கவில்லை. துணிந்து தமிழில் பதிலளியுங்கள் பார்க்கலாம் இப்படி தமிழில் முடியாவிட்டால் நீங்கள் தமிழர்களாக இருப்பதே  மடமை.தமிழில் தட்டச்சிட தெரியாது . ஆங்கிலத்தில் கேட்டால் ஆங்கிலத்தில் தான் பதிலளிப்போம் என்பதெல்லாம்  ஏற்க முடியாத வாதங்கள். உணர்வு இருப்பின் தமிழ் தடையல்ல. எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றுமட்டும் எண்ணிவிடவேண்டாம். வெள்ளைக்காரனுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் கொடுப்பது வேறு தமிழர்களுக்கு ஏன் இந்த வரட்டுகௌரவம்?

அடுத்த விடயம் தமிழ்காலாச்சாரம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளும் நீங்கள் எப்பொழுதும் வேட்டியும் சால்வையும் போட்டுக்கொண்டு வேலைக்கு போகலாமே! நாகரீகத்துடன் நாமும் மாறவேண்டும் என்று கூறுவீர்கள் அதைத்தான் நானும் சொல்கின்றேன். ஆபத்தில்லாத விடயங்களை அனுமதிப்பதில் தவறில்லை. உண்மையில் இது மேற்கத்தைய விளையாட்டு அதில் சேலையுடன் நடன மங்கைகளை ஆடவிடுவது இயலாத காரியம் ஆடினாலும் வடிவா இருக்காது .அதற்கு இந்த வகையில் ஆபாசமில்லாமல் ஒரு நடனக்குழுவை இறக்கியதில் தப்பில்லையெனவே தோன்றுகின்றது.விடுதலைப்புலிகள் காலத்தில் கூட தெருக்கூத்துகளின் போது பெண்கள் நீளக்காற்கட்டை அணிந்த வாறுதான் நடனமாடுவார்கள் எல்லாப்பக்கத்திலும் இருந்து பார்கக்கூடிய நிகழ்வுகளுக்கு அதுதான் பொருந்தும் உள்ளக மேடை நிகழ்வுகளுக்குத்தான்  பரத நாட்டியம் பொருந்தும். 


இதுக்கும் கலாச்சார சீர்கேட்டுக்கும் என்ன சம்பந்தம் எண்டு தெரியல. தொலைக்காட்சியில் மானாட மயிலாட போகேக்க குடும்பமா இருந்து வாயில ஈ மொய்க்கிறது தெரியாம ஆவென்று கொண்டு இருக்கிறதுகள் சும்மா எதுக்கெடுத்தாலும் விமர்சிக்கினம் போல இருக்கு. எல்லா விசயத்தினையும் நடுநிலையோடு சுய சிந்தனையோடு ஆய்ந்து விமர்சிக்கவேணும். பெண்ணடிமைத்தனம் குறுகிய மனப்பான்மை பிழையான கண்ணோட்டம் காழ்ப்புணர்ச்சி தாழ்வு மனப்பான்மை இதுகளின் ஒட்டுமொத்த வடிவம் இதனை விமர்சிக்கிறவர்களின் கருத்துக்களில் தொனிக்கிறது

இதை விமர்சிப்பவர்கள் பெண்கள் ஆடும் IPL காட்சிகளையும் தென்னிந்திய நடனக்காட்சிகளையும் தமது வீட்டு தொலைக்காட்சிப்பெட்டிகளிலாவது தடைசெய்வார்களா? அல்லது வீட்டில் உள்ளவர்களை பார்க்கவிடாமல் தடுப்பார்களா?

இதுக்கும் விடுதலைப்போடாட்டத்துக்கும் கூட சம்பந்தம் இல்லை இதை அனுமதித்தவர்கள் விடுதலைப்போராட்டத்திற்கு எதிரானவர்கள் என்று வேறு சில இடங்களில் கதை கட்டுகிறார்கள்.விடுதலையினை இங்கு யார் எதிர்க்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.விடுதலையினை சுதந்திரத்தினை எந்த சராசரி துாய மனிதனும் எதிர்ப்பதில்லை.தலைவரை மதித்தோம் போராட்டத்தினை மதித்தோம் இனியொரு விடுதலை நம் இனத்திற்கு கிடைத்தால் துள்ளிக்குதிப்போம் அதுக்காக ஏன் இப்பிடி சம்பந்தமில்லாம.. ?

முகப்புத்தகத்தில் சில இடங்களில் விமர்சனம் செய்வோர் சகோதர சகோதரிகளை மல்லுக்கு அழைப்பதை பார்க்கும்போது தெரிகிறது அவர்களின் விரசம். அந்தக்காலத்தில் சின்னமேளம் கொண்டுவந்து ஊர்க்கோயில்ல ஆட்டம் போடேக்க இவர்களின் பெற்றோர்கள் கைகொட்டி ஆர்ப்பரித்ததை அவர்கள் கண்டிருக்க வாய்ப்பில்லை. அது கலாச்சார சீர்கேடு இல்லையா? அதேபோல மாணவிகளை பரதநாட்டியம் ஆடவிட்டு 5 யார் இடவெளியில் இருந்து அங்க அசைவுகளை ஆவென்று பார்த்துக்கொண்டு கொண்டு இருக்கிற கலாச்சார காவலர்களையும் நாம் அறிவோம். விடுதலை பற்றி பேசுவோர் அதை வைத்து இணையத்தளங்கள் நடத்துவோர் பெரும்பாலானவர்கள் சினிமா மற்றும் கிளுகிளுப்பு செய்திகளை முன்னிலைப்படுத்தி வருகையாளர்களை அதிகரிப்பதையும் அறிவோம்!


இது பாடசாலை விளையாட்டுபோட்டியும் இல்லை பாடசாலை துடுப்பாட்ட போட்டியும் இல்லை என்பதைக்கூட விமர்சிப்பவர்கள் உணர வேண்டும். யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்ற மனநிலையினை வளர்க்கவேண்டும். அதை விட்டுவிட்டு வேண்டாப்பெண்டாட்டி கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் என்ற மனநிலையில் விமர்சிக்க கூடாது. எங்களுக்கு இப்போது துடுப்பாட்ட வளர்ச்சி கண்ணுக்கு தெரியவேண்டுமே தவிர நடனமங்கை தெரியக்கூடாது. அருச்சுனன் அம்பு விடும்போது இலக்குமட்டுமே தெரிந்தது மற்றொன்றும் தெரியவில்லை என இலக்கியம் கூறுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்வு நடாத்துவதாயின் எவ்வாறான நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஊடகங்கள் கூட தமது நிகழ்வுக்கு இராணுவத்தினை அழைப்பதை கண்ணுற்றிருக்கின்றேன். மனதுக்குள் நெருடல் இருந்தாலும் செய்வதற்கு ஒன்றுமில்லை.

திரண்ட மக்கள் மாணவர் ஆதரவை பயன்படுத்தி ஒரு அரசியல் போராட்டம் நடாத்த திராணியற்றவர்கள் சிறைசெல்ல பயந்தவர்கள் வெறும் ஏட்டுச்சுரக்காய் அரசியல் செய்யும் கையாலாகதவர்களிடம் நமது இன அரசியல் பணி  வழங்கப்பட்டு இருப்பதே உண்மை.தமிழ்த்தேசியம் பேசுபவர்கள் இன்று தொடங்கி இன்று வரை நமக்கு அல்வா கொடுத்துக்கொண்டிருப்பதையும் அறிவோம் இருந்தும் அவர்களுக்கே வாக்களிக்க நாம் தவறுவதும் இல்லை எமது கொள்கைகளில் இருந்து பின்வாங்குவதும் இல்லை. முதுகெலும்பில்லாத பலர் இன்று அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. தமிழ் தேசியக்கொள்கைகளை வைத்து தம்மை மேல் நிலைப்படுத்த எண்ணுகிறார்களே தவிர எமக்கு ஒன்றும் கிடைத்ததில்லை.

பலாலியில் வெற்றி விழாவில் மாணவர்களைக் கொண்டு படையினருக்கு சின்னம்சூட்டவைத்தார்கள் அதற்கு இந்த தமிழினக்காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்.? வெற்றிவிழாவில் எமது நடனமங்கையரை பரதநாட்டியம் ஆடவைத்தார்கள் அதையெல்லாம் யார் தட்டிக்கேட்டார்கள்.பாடசாலைபற்றியும் அதன் பெருமைபற்றியும் அலட்டிக்கொள்ளும் இந்த அபிமானிகளில் எத்தனை பேர் பாடசாலை விலகிய பின் பாடசாலை நடவடிக்ககைகளில் பங்ககெடுத்தார்கள் உதவியுள்ளார்கள்.? அல்லது குறைந்த பட்சம் பழையமாணவர் சங்கத்தில்  இணைந்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.? வெளியில் இருந்துகொண்டு கர்ணபரம்பரைக்கதைகளை கேட்டு சொல்பவர்கள்போல் யாரோ சொல்லும் புனைகதைகளினை கேட்டு விமர்சனம் செய்வது அழகல்ல.

பொதுவாக சொல்கின்றேன். சிலர் அர்பணிப்புடன் இயங்கி வருவதை மறுப்பதற்கில்லை. ஆயினும் வாங்குவது அரச சம்பளம் பேசுவது தேசியம். அரச சம்பளம் மக்கள் பணம் என்றால் அதனை எல்லாம் மக்களுக்கே அர்ப்பணித்துவிட்டு சாதாரண பொதுமகன் போல இவர்களால் வாழ முடியுமா?. என்னைப்பொறுத்தவரை அவர்கள் அனைவரிடமும் துாய அரசியல் கிடையாது.  அறிக்ககைகளிலும் வீரவசனங்களில்மட்டும் மட்டும் அரசியல் செய்வதையும் பொதுசனம் அறியும். முன்புறம் தேசியம் பேசிக்கொண்டு பின்புறம் சலுகைகள் பெற்றுக்கொண்டிருக்கின்றனர். இன்று தமிழ் அரசியலில் ஈடுபடுபவர்களின் முழுக்கதையும் நமக்கு தெரியும்.இருந்தாலும் காரியம் உங்களைக்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளதால் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். இந்த துடுப்பாட்ட நிகழ்வு குறித்து அரசியல் பற்றியும் கதைக்கிறார்கள் என்பதால் இங்கு அதனை சொல்லவேண்டியுள்ளது.

துடுபாட்டநிகழ்வு பற்றி ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் பவ்வியமாக இப்படிச்செய்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் அப்படி செய்யாமமைக்கு காரணம் என்ன என்று ஒழுங்கமைப்பாளர்களை நேரடியாக கேட்டிருக்கலாம்.அதைவிட்டுவிட்டு காலாச்சாரம் சீரழிந்துவிட்டது என்று ஆர்பாட்டம்போடுவதால் பலன் எதுவும் இல்லை. அதன் மூலமாக எவரும் கலாச்சார காவலர்களாக மாறிவிடவும் முடியாது.

இறுதியாக சொல்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் தம்மால் இயன்றவரை தமிழையும் தமிழ் கலாச்சாரத்தினையும் இனத்தினையும் மீட்கும் வகையில் தூய மனதுடன் ஏதாவது செய்துகொண்டிருந்தால் நிச்சயம் நம்மினம் விடுதலைபெறும். கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.அதைவிடுத்து தனிப்பட்ட அரசியல் கோபதாபங்கள் விருப்புவெறுப்புக்களை எல்லா விடயங்களிலும் பிரயோகித்தால் நிச்சயம் நாம் பிளவுற்றுக்கொண்டே போவோம்!.எத்தனையோ நல்லவிசயங்கள் நடைபெற வேண்டியுள்ளது அதைவிடுத்து காசுக்கு வந்து ஆடிவிட்டுபோகும் அந்த நடனமாதுக்கள் பற்றி இப்படி ஆளாளுக்கு அடிபட்டுக்கொண்டிருந்தால் அவர்களுக்கான மவுசு கூடுமே தவிர தமிழ் கலாச்சார மவுசு கூடாது.அந்தப்பொண்ணுகள் இப்ப வேறு ஏதாவது நிகழவுக்கு முற்பணம் வாங்கியிருபாளவை இங்க நாங்க அவையப்பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறம். எனது கருத்துக்கள் துாய மனதுடன் அரசியல் செய்யும் அல்லது சேவைசெய்யும் எவரையேனும் குறித்துநிற்கவில்லை என்பதை மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். தொப்பி அளவானவர்கள் போட்டுக்கொள்ளலாம்.

நன்றி

எனது சட்டத்தில்.....

Posted by Thava சனி, 19 மே, 2012 0 comments


ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனக்கென சிறப்பான கொள்கைகளும் இலட்சியங்களும் இருக்கும். அதேபோல தனித்திறமைகளும் இருக்கும். அவனுக்கென பிடித்தவைகள் பிடிக்காதவைகள் என பல விடயங்கள் இருக்கும். இருந்தபோதிலும் வாழ்க்கைச்சக்கரத்தில் விரும்பியோ விரும்பாமலோ அன்றி சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாகவோ இவற்றினின்றும் விட்டுக்கொடுக்க வேண்டிய தேவை ஏற்படலாம். எது எப்படியோ தனிமனிதனின் பலவிடயங்கள் மாற்றதற்குட்படாதவைகள் என்பதை யாவரும் அறிவோம்

எனக்கு கல்லுாரியில் கல்விகற்பித்த ஆசிரியர் எமக்கு அறிவுரை கூறும் வேளைகளில் சொல்வது எனக்கு ஞாபகம் வருகிறது ”இந்த விசயம் உன்னுடைய சட்டத்தில் சரியாகலாம் ஆனால் என்னுடைய சட்டத்தில் பிழையானது” என்று. அவருடைய கருத்துக்களை பகுத்தாய்ந்து பார்க்கும் பக்குவம் எனக்கு அன்று இருந்ததில்லை. இன்று இருக்கிறது அது முற்றிலும் உண்மையானது என்று எனக்கு இன்று புரிகிறது. குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக ஒவ்வொருவருடைய நோக்கும் வேறுபடுகின்றது சிலவேளைகளில் ஒத்துப்போகிறது.

இந்தவகையில் வாழ்கையின் அரைவாசிப்பகுதியை அண்மித்திருக்கும் என்னுடைய பார்வையில் ஒவ்வொரு விடயங்களும் எப்படிப்படுகின்றன அவற்றை நான் எதிர்கொள்ளும் விதத்தினையும் நேரமுள்ள நேரங்களில்(?) இங்கு பதிவுசெய்யலாம் என நினைக்கிறேன்.அவை என்னைவிட இளையவா்களுக்கும் ஏன் பெரியவர்களில் சிலருக்கும் தம்மை மீள சரிசெய்ய அல்லது சிந்திக்க வழிவகுக்கலாம்.அதேவேளை என்னை சுயபரிசீலணை செய்யவும் இது உதவக்கூடும்


இத்தனைக்கும் நான் ஒரு ஞானியோ யோகியோ முற்றுமுழுதான யோக்கியன் என்றோ கூறவிரும்பவில்லை. சில பல வி்டயங்களில் நான் (நான் எனும் ஆணவம்கூட என்னை விட்டு போகவில்லை பாருங்கள்) தவறுகள் தப்புக்கள் செய்திருக்கின்றேன். தண்டிக்கப்படிருக்கிறேன் பிராயச்சித்தம் செய்திருக்கின்றேன்(சமய சடங்கல்ல).அதற்காக வருந்தியிருக்கிறேன்.சிலவற்றுக்காக அலட்டிக்கொள்ளாமலும் இருந்திருக்கிறேன்.

என்னுடைய சட்டத்தில் எது சரியென்று படுகின்றதோ அதனை செய்துவிட தயங்கமாட்டேன். இன்னொருவருடைய அறிவுறுத்தல்களை முற்றுமுழுதாக நம்பிவிட நான் தயாராக இல்லை. அதேவேளை அவருடைய அறிவுத்தல் அல்லது தகவல் நுாற்றுக்கு நுாறு சரியென என்னால் உறுதிப்படுத்தப்படுமிடத்து என்னுடைய முனைப்பு பிழையென நான் கண்டுகொண்டால் நிச்சயம் என்னை சரிசெய்ய தவறுவதில்லை.

வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் பிழையான புரிந்துகொள்ளல் தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆயினும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை சாட்டாக சொல்லி இதற்கான பொறுப்பிலிருந்து பலரும் விலக நினைக்கிறார்கள். ஏன் தென்னிந்திய தொலைக்காட்சித்தொடர்களில் நுாறுவீதமானவை இந்த கருப்பொருளை மையமாககொண்டே நகர்த்தப்படுகின்றன. 

என்னைப்பொறுத்தவரையில் மற்றவர்களினுாடு கிடைக்கும் தகவல்கள் யாவும் முதலில் என்பார்வையில் பொய்யானவையாக அல்லது சந்தேகப்புள்ளி இடப்பட்டதாகவே இருக்கும் எனது அறிவிற்கு எட்டியவரையில் தேடுதல்கள் உறுதிப்படுத்தல்கள் போன்றசெயற்பாடுகளை மேற்கொள்வேன் அதில் தேறி வருவனவே உண்மையென கருதுகின்றேன்.

சிறுவயதில் இருந்தே எனக்கு துப்பறிதல் மற்றும் ஆய்வுசெய்தல் போன்றவற்றில் மிகுந்த விருப்பம் உண்டு.அப்படிச்சொன்னவுடன் என்னைப்பற்றி சிலா் ”இவன் சரியான சந்தேகப்பிராணியோ” என எண்ணக்கூடும். அவர்கள் நினைப்பது தவறு.அப்படி அவர்கள் நினைத்தால் எனக்கு அதைப்பற்றி கவலையும் இல்லை. காரணம் எனக்குத்தான் என்னைப்ற்றி நன்றாகத் தெரியுமே. நமது சந்தேகத்தினால் பிறரது மனம் புண்படாதவகையில் அது பாரதுாரமானதாக இருக்காது. 

நமது சந்தேகம் வெளிப்படுத்தப்படாமல் இருக்கவேண்டும். சந்தேகம் என்பது எப்போது வெளிப்படுத்தப்படுகின்றதோ அப்பொழுதே பிரச்சனை ஆரம்பமாகி விடுகிறது. சந்தேகம் இரண்டுவகையானது ஒன்று குறித்த தகவலை சந்தேகப்படுவது மற்றது மூலத்தினையே சந்தேகிப்பது.இரண்டாவது தான் பிரச்சனைளை உருவாக்கக்கூடியது.

ஒரு தம்பதியரிடையே தோன்றும் சந்தேகம் சம்பந்தமான சம்பவத்தினை நோக்குவோம் (நான் இப்பத்தியெழுதும்வரை திரமணமாகாதவன் என்பது குறிப்பிடத்தக்கது) . கணவன் வீடு திரும்புகின்ற நேரம் சிலகாலமாக வித்தியாசமானதாக இருக்கிறது. மனைவி அதனை கண்டும் காணாமல் இருப்பது அழகல்ல. மனைவி எப்படி அணுகலாம். என்ன வழியில ஏதும் பிரச்சனையோ? என்று கேட்காமல் ஏன் தாமதம் என கோபமாகவோ அதட்டலாகவோ கேட்பதன் மூலம் பதிலை சொல்வதற்கான ஏது நிலையினை இல்லாமல் செய்து விடக்கூடாது. 

அதேவேளை கணவனும் முதல்கேள்வி கேட்கப்படும்போது தடுமாற்றத்துடன் பதிலளிக்காமல் சிறு விடயமாக இருந்தால் நிதானமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளிக்கணே்டும். அல்லது பெரிய விடயமாயின் ஓரளவுக்கேனும் விளங்கிக்கொள்ளகூடிய வகையில் சுருக்கமாக விளங்கப்படுத்தணே்டும் பின்னர் தெளிவான விளக்கம் வழங்கலாம்.

இப்படிச்சொன்னால் அப்படி ஆகிவிடுமோ என கற்பனைசெய்து ஒருபொய்யினை எடுத்து விட்டு அதனை காப்பாற்ற இன்னொரு பொய்யினை எடுத்து விட்டு இசகுபிசகாக மாட்டி முழிக்கக்கூடாது.அவை சந்தேகத்தினை வலுப்படுத்துமே தவிர நீக்காது. மேலும் மனைவியினைப்பொறுத்த வரையிலும் சற்று நிதானம் வேண்டும் ஆதாரமில்லாமல் கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கக்கூடாது. தீரவிசாரித்து உண்மையறிந்தபின்னா் நம்புதலை கடைப்பிடிக்கவேண்டும்

கூடியவரையில் நல்லமனிதா்களாக வாழப்பழகவேண்டும் ஒளிவுமறைவு இன்றி சகலவற்றையும் ஒப்புவிக்கவேண்டும். அநேக விடயங்களில் வெளிப்படையாக இருந்துவிடுதல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்காது.

சில விடயங்களை மறைக்கத்தான் வேண்டும் அவை எங்கே பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதை குறித்த விடயம் தான் நிர்ணயிக்கும். நிச்சயம் அந்தரங்கமானதாக எவையாவது ஒவ்வொருவருக்கும் இருக்கும் இதையும் கொட்டித்தீர்த்து விட்டவர்கள் தன்னாலே கெட்டவா்களாகிறார்கள் அல்லது துரோகமிழைத்தவா்களாகிறா்கள்.. இங்கு அதற்கு உதாரணமாக அரசவிசுவாசம் சம்பந்தப்பட்ட தகவல்களினை குறிப்பிடலாம்.

எனது சட்டத்தில் அனைத்தையும் வெளிப்படையாக மேற்கொள்வதையே விரும்புகின்றேன். ஆயினும் இரகசியம் காக்க வேண்டியிருப்பின் அவை எந்நிலையிலும் என்னிடமிருந்து வெளியில் வராது.