வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

வெல்லப்போவது யார்

Posted by Thava சனி, 14 செப்டம்பர், 2013 0 comments

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இன்னும் சில நாட்களில் அதாவது எதிர்வரும் 21 ம் திகதி நடைபெறவுள்ள வடமாகாணசபைத்தேர்தலில் வெல்லப்போவது யார் என்ற கேள்வி பலரால் கேட்கப்படுகிறது. வடக்கு மகாணத்தில் உள்ளவர்களை விட அதற்கு வெளியில் உள்ளவர்களாலேயே இந்த வினா பெரிதும் எழுப்பப்படுகின்றது.

வடக்குமாகாணத்தினைபொறுத்தவரை அவதானிக்கப்பட்ட மக்கள் அலைகள் மற்றும் கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பெரு வெற்றி பெறும் என்பது உறுதியாகி வருகின்றது. வெளியில் உள்ளவர்களுக்கு இச்செய்தி 22ம் திகதிக்கு பின்னர்தான் உறுதிசெய்யக்கூடியதாக உள்ளது எனினும் இங்குள்ளவர்களுக்கு அது தெரிந்த முடிவாயிருக்கின்றது.

அரசதரப்பு வேட்பாளர்கள் அமைச்சர்கள் பலர் இதனை தமது ஆதரவாளர்களிடத்திலும் ஏன் சில கூட்டங்களிலும் தாமே கூறிவருகின்றனர். சனாதிபதி மகிந்த இராஜபக்ச கூட ,அவர்கள் வெற்றிபெற்றாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற முடியாது என்ற கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் இதனை ஒத்துக்கொள்கின்றார். அவற்றை எல்லாம் தாண்டி அரசு அமைச்சர் நிமால் சிறிபால்டி சில்வா  கூட்டமைப்பினரின் விஞ்ஞாபனத்திற்கு தம்மிடம் நல்ல மருந்துகள் இருப்பதாகவும் கூட்டமைப்பினரால் அதை நிறைவேற்ற முடியாதென்றும் கூறியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசியக்கட்சியும் அதன் தலைவர் பங்குபற்றியிருந்த கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தான் முதலமைச்சர் என் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சில வெளிப்படை உண்மைகளை தேர்தல் வைத்துத்தான் தெரியவேண்டுமென்பதில்லை .மக்கள் எளிதில் பழையதை மறக்கத்தயாரில்லை என்பதே யதார்த்தம் என நமது சுற்றுவட்டாரத்தில் சில வீட்டுக்கட்சி ஆதரவாளர்கள் கூறிக்கொள்கின்றனர்.

இந்த தேர்தலை பொறுத்தவரை  இங்குள்ள வாக்காளர்களில் கணிசமானவர்கள் இம்முறை தான் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தினை முதற் தடவையாக பயன்படுத்த உள்ளனர். பலர் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெயர்வின் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அவர்களது சொந்த இடங்களில் இருந்த நிலை மாறி தற்போது அனைவரும் தமது வாக்காளர் இடாப்பினை திருத்தி சரியான தொகுதிகளை மாற்றியிருக்கின்றனர்.அதோடு வடக்கு மாகாணசபை என்பதை பல வாக்காளார்கள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கின்றார்கள் அதை புதிய ஒன்றாகவும் நோக்குகின்றனர். தீர்வுக்கான ஆரம்பமாகவும் நோக்குகின்றனர்.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நடைபெற்ற தேர்தல்களில் அரச தரப்புக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் மாறிமாறி அவர்கள் கேட்ட ஆணைகளுக்கு பதில் வழங்கி தமது நிலையினை தெரிவித்து வந்திருந்தனர்.அதன் போது  எதிலும் கணிசமான அதிகாரங்களுடன் ஆட்சியை அமைக்கக்கூடிய ஒரு அரசியல் கட்டமைப்புக்குரிய தேர்தல்களாக இவை அமைந்திருக்கவில்லை. சனாதிபதித்தேர்தலாக இருந்தால் என்ன பாராளுமன்ற தேர்தல்களாக இருந்தால் என்ன உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலாக இருந்தால் என்ன அவற்றில் இடங்களை கைப்பற்றுவதன் மூலம் சாதிக்கக்கூடிய ஆட்சி எதனையும் ஏற்படுத்திவிடமுடியாது  என்பதே அதற்கு காரணம். கடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பலர் ஈடுபாடே காட்டியிருக்கவில்லை அவ்வளவுக்கு அது அரசியல் முக்கியத்துவம் கொண்டிருக்கவில்லை.

இருப்பினும் நடைபெற்ற கிழக்கு மாகாண தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியை நழுவ விட்டிருந்ததை மறப்பதற்கில்லை.தமிழ்மக்கள் பலரால் அதை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை அத்தேர்தலில் முஸ்லிம்களும் முக்கிய தீர்மானிக்கும் சக்தியாக இருந்தமையும் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுகளும் அவர்களால் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றமுடியாமல் போனமைக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருந்தது. இருப்பினும் நடைபெற உள்ள வடமாகாணசபைத் தேர்தலானது முற்றிலும் வேறுபட்டதாக காணப்படுகின்றது. சர்வதேசத்தின் கவனம் கூட இந்த தேர்தலில் மிகவும் இறுக்கமாக பதிந்திருக்கின்றது.இந்தியாவின் ஆதிக்கம் நிறையவே உள்ளது. இந்நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் முதுகெலும்பாக கணிக்கப்படக்கூடிய யாழ்ப்பாண அரசியல் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையில் இன்று நேற்றல்ல அன்று தொடக்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

எனவே அது சார்ந்துள்ள வடமாகாணசபை தேர்தலில் மக்கள் கூடிய அக்கறையுடன் இருப்பதில் வியப்பேதுமில்லை. இந்த தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றியினை உறுதிசெய்யக்கூடிய நிறைய காரணிகள் முன்னரே தென்படத் தொடங்கியிருந்தன. அதற்கு அரசாங்கமே பலவழிகளில் வழிகோலியிருந்தது. மனித உரிமை குறித்த சர்வதேச நெருக்கடி, காணி சுவீகரிப்பு ,காணாமல்போனோர் விவகாரம் இறுதிப்போரில் சரணடைந்தவர்கள் நிலை குறித்த தெளிவின்மை போன்ற காரணிகளை இங்கு குறிப்பிடலாம்.

இது தெரிந்தோ என்னவோ அரசாங்கத்துடன் இணைந்து அரசியல் செய்கின்ற முதலமைச்சராக தானே வருவேன் என கூறிக்கொண்டிருந்த அமைச்சர் கூட இத்தேர்தலில் தான் போட்டியிடாது ஒதுங்கி தன் கட்சியின் மற்றவர்களுக்கு வழி விட்டிருந்தார்.அது அவரது சாணக்கியம் என பலரும் பேசிக்கொள்கின்றனர். அரசாங்கத்தினைப்பொறுத்தவரை வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றவர்களில் குறிப்பிட்ட தொகையினரேனும் வெற்றி பெறவேண்டும் என்ற அவாவிலேயே தொழிற்படுகின்றது. அதற்கு அரச தலைவர் தொடங்கி அமைச்சர்கள் வரை தனது முழு வளங்களையும் எந்தவித மட்டுப்பாடுகளுமின்றி பயன்படுத்திவருகின்றனர். அவர்களைப்பொறுத்தவரை ஆட்சியைப்பிடிப்பதல்ல முக்கிய நோக்கம். தமது தரப்பிலும் மக்கள் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்டுவதே ஆகும்.  தற்செயலாக வெற்றிலை அணி ஆட்சியை பிடித்தால் அது அவர்கள் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.

இறுதி நேரத்தில் வெற்றிலை அணியினரின் உள்வீட்டுச்சண்டைகள் கூட வெற்றிவாய்பினை குறைத்திருக்கின்றது அத்துடன் கட்சிகளுக்கிடையிலும் ஒற்றுமை இருக்கவில்லை வெற்றிலைக்குள்ளும் அழுகினது வாடினது இருக்கும் என்று கூறியதன் மூலம் அமைச்சர் அதனை சூசகமாக கூறியிருந்தார். நவநீதம்பிள்ளையின் வருகையின் பின்னரான அம்மையாரின் இறுதிப்பேச்சு கூட அரச தரப்புக்கான ஒரு பின்னடைவே.

இந்நிலையில் முதலமைச்சர் தெரிவில் கூட்டமைப்பில் வெடித்த சண்டை மற்றும் அதற்கெதிரான விமர்சனங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.அதனையே அரசதரப்பும் அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றது. இருப்பினும் விக்கினேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட உடன் எழுந்த எதிர்ப்பு அலைகள் ஊடகங்களின் பார்வைகள் மெல்ல மெல்ல மறைந்து அநேக தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வெற்றிக்கு தமது பங்கினை செய்ய தொடங்கின செய்கின்றன என்பது உண்மை.அதற்காக கூட்டமைப்பினரை அவர்கள் முற்றுமுழுதாக ஆதரிக்கின்றார்கள் என்ற முடிவுக்கும் வர முடியாது.

கூட்டமைப்பு தொடர்பில் பலர் தெளிவாக புரிந்து வைத்துக்கொண்டுள்ளனர்  வாக்களிக்க முடிவுசெய்தவர்களிடம் உள்ள ஒரே காரணம் அவர்களுக்கு வழங்குவதற்குரிய இறுதி சந்தர்ப்பம் இது என்றும் அதற்கு பிறகும் வழிக்கு வரவில்லையென்றால் சிந்திப்போம் என்பதுவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினருக்கு எதிரான சரியான தெரிவு அவர்களிடம் தற்போது இல்லை என்பதும் ஆகும்.

அவர்களில் பலர் கூட்டமைப்புக்குரிய பதிலீடாக அரச தரப்பினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். கூட்டமைப்புக்கு எதிரான கொள்கைகளை கொண்டிருக்ககூடிய கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் , முதலில் இருந்து கூட்டமைப்பினை ஆதரித்த சிவில் சமூகமும்   கூட்டமைப்பிற்கான மாற்று சக்தி ஒன்றை உருவாக்க பின்னின்றமையும் பலரால் விமர்சனக்கண்ணோட்டத்துடன் நோக்கப்படுகின்றது. விரும்பியோ விரும்பாமலோ அந்த மாற்று அணிக்கான தகுதிகாண் பரீட்சையாகக்கூட இந்த தேர்தல் மற்றும் அதன்பின்னரான ஆட்சி அமைப்போகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.

தமது தலைமைக்கு ஆப்பு வைத்துவிடக்கூடாது என்பதற்காக பல முக்கிய நபர்களை புறக்கணித்து அவர்களை ஆளும் கட்சிக்கு அனுப்பிவைத்த அல்லது ஆதரவு கொடுக்கவைத்த ,விலகி நிற்க வைத்த பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு அதனை உள்வாங்கி மாற்றுவெளியை உருவாக்கத்தவறிய பெருமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் சிவில் சமூகத்தினையும் சாரும்!

கருத்துக்கணிப்புக்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெறும் என்று கூறி நிற்கின்ற போதிலும் நியாயமான நேர்த்தியான இதய சுத்தியுடனான அரச எதிர்ப்புத்தளத்தினை நமது மக்கள் கொண்டிருக்கவில்லை என்ற கவலை பலரிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.வீட்டுக்கு புள்ளடியிடப்போகின்றவர்களில் பலரிடம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தொடர்பான நிறைய விமர்சனங்கள் உள்ளன.இந்த மாகாணசபையால் எதுவும் சாதித்துவிடமுடியாது என்ற போதிலும் நீதியரசர் தனது சட்ட நுணுக்கங்கள் ஊடாக ஏதாவது அதிசயங்கள் செய்வாரோ என்ற எதிர்பார்பிலும் பலர் உள்ளதை அறிய முடிகிறது. அதனை கட்டியம் கூறும் வகையில் தேர்தல் விஞ்ஞாபனம் இருந்தபோதிலும் இருதரப்பு மீதும் விசாரணைவேண்டும் என்பதை வேட்பாளர்களில் ஒருவரான அனந்தி சசிதரன்  (எழிலன்) எதிர்த்து நிராகரித்திருந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும். காணாமல்போனவர்களின் உறவினர் மத்தியில் அவரது குரல் ஒங்கி ஒலிப்பதையும் காணமுடிகிறது.

வேட்பாளர்களின் முரண்பாடான கருத்துக்களுக்கு மத்தியில் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசரான விக்கினேஸவரன் மீது புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியத்தமிழர்களிடம் அவரது பேட்டிகளினால் ஏற்பட்டு இருந்த வெறுப்புணர்வு மறைந்து புலிகளின் தலைவர் பிரபாகரனை மாவீரன் என்று கூறியதன் மூலம் வளர்ந்த நிலை மீண்டும் தமிழரும் சிங்களவரும் கணவன் மனைவி உறவுள்ளவர்கள் என்று சாரப்பட கூறியதன் மூலம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களுக்கு அப்பால் வடமாகாண மக்களில் பலர் விரும்பியோ விரும்பாமலோ வீட்டுக்கு வாக்கு போடவேண்டும் என்ற நிலையில் இருப்பதை மறுக்கமுடியவில்லை

உணர்ச்சிக்கு ஆட்பட்ட சாதாரண மக்கள் எதற்கும் பதில் கூறாமல் கண்மூடித்தனமாக வீட்டுக்கு போட போகின்றார்கள் அடுத்த பக்கத்தில் நடுவு நிலமையுடன் நிற்பவர்கள் என்று தம்மை சொல்லுகின்றவர்களில் ஒருபகுதி கூட்டமைப்பினை விட வேறு தெரிவு இல்லை என்கிறார்கள். இன்னொரு தரப்பு சரி வெற்றிலைக்கே போடலாம் என்கிறது இன்னும் ஒன்று ஒன்றுமே வேண்டாம்  என்று ஒதுங்கி கொள்கிறது.

இன்றைய நிலையில் கருத்துக்கணிப்பிற்கமைவாக மக்களின் தெரிவாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே இருக்கின்றது அடுத்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இருக்கிறது. ஆசனங்களைப்பொறுத்தவரை மொத்தம் உள்ள 36 இடங்களில் கூட்டமைப்பு 25 இடங்களை வெல்வது உறுதி என கூறலாம். ஏனைய  இடங்களில் 10 இனை அரசும் 1 இனை ஐக்கிய தேசிய கட்சியும் பெறலாம். கூட்டமைப்பில் விக்கினேஸ்வரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவார் என்பதில் ஐயமில்லை. சுயேச்சைகள் அனைத்தும் தோல்வியை தழுவும் என்றே தெரிகிறது.சுயேட்சை வேட்பாளர்களில் பலர் வெளிநாட்டு அகதி அந்தஸ்த்தினை கோருவதற்கு முன்னேற்பாடாகவும் வாக்குகளை சிதைப்பதற்காகவுமே களமிறங்கியுள்ளனர் என்பது ஊரறிந்த விடயம்.

அரசதரப்பில் இளையவர் தரப்பில் அங்கஜன் இராமனாதனின் குரல் ஓங்கி இருப்பதாக தெரிகிறது. அது வேலைவாய்ப்பினை நோக்கி மையம்கொள்வதை அவதானிக்கமுடிகிறது. அதைவிட அரசதரப்பில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முதன்மை வேட்பாளரும்  தன்பங்கிற்கு தனது இடத்தினை உறுதிசெய்ய பெரிதும் முயன்று வருவதை காணமுடிகிறது.

குறிப்பிடக்கூடியளவு இல்லாது விடினும் ஒரளவுக்கு வேட்பாளர்கள் மக்களின் தெரிவுக்கு இருபக்கமும் இருப்பதாகவே தெரிகிறது.தேர்தல் வேட்புமனு தாக்கல்செய்தபோது இருந்த நிலையிலும் தற்போது வேட்பாளர் அறிமுகம் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறது. எது எப்படியோ சின்னங்கள்தான் இங்கு முன்னிலையில் மக்களிடம் பேசப்படுகின்றது.

முற்கூட்டிய கருத்துக்கணிப்பு அலைகள் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுமென்று எதிர்பார்க்கின்ற போதிலும் கட்சிகளின் அமைதியான வாக்கு வங்கிகள் ஒருபுறம் காத்துக்கிடக்கின்றன. யாழ்தேவியை கிளிநொச்சிவரை அனுப்பி அரசு அபிவிருத்தியினை அறை கூவுகிறது. அரச தலைவர் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார். இவற்றுக்கு சளைக்காமால் மக்களை ஒருகணம் சிந்திக்க வைக்கின்ற வகையான அமைச்சர்களின் மற்றும் இராவணா சக்தி போன்ற அமைப்புக்களின் இனவாதக்கருத்துக்கள் , ஆட்கொணர்வு  மனு தொடர்பிலான நீதிமன்ற நடவடிக்கைககள் இவற்றையெல்லாம் தாண்டி தேர்தல் முடிவுகள் மூலம் வெல்லப்போவது யார் என்று சொல்லப்போவது மக்கள் தான் நான் மட்டும் அதனை தீர்மானிக்கமுடியாது.

2009 இறுதி யுத்தத்தில் பலர் கண் முன் சரணடைந்தவர்களை நாம் பொறுப்பேற்கவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல அரசு நீதி மன்றில் அறிக்கை சமர்ப்பித்திருப்பது மிக மிக தவறானது. 

போட்டுட்டம் என்று சொல்லி பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வந்து பொதுமன்னிப்பு கேட்டிருந்தால் கூட மக்கள் மன்னித்திருக்கக்கூடும் . பொறுப்பு வாய்ந்த , தமிழ் மக்கள் மீது அக்கறையுள்ள இதயசுத்தியுடைய அரசு மனித உரிமைகளை மதிக்கின்ற அரசாக இருந்திருப்பின்

அந்த நாட்டின் அரச தலைவர் என்ற ரீதியில் மன்னர் மேதகு மகிந்த மக்களிடம் இறுதியு்த்தத்தில் தெரிந்தோ தெரியாமலோ கொல்லப்பட்ட மக்களுக்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோரியிருக்கலாம் அப்படி இருந்திருப்பின் அவரின் உயர்ந்த பண்பை எடுத்துக்காட்டி சர்வதேச சமூகத்தில் நன்மதிப்பினை ஏற்படுத்தியிருக்கும்.

அதிகுறைந்தது அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களையாவது அடக்கிவைத்திருக்கவேண்டும்.அவர்கள் எமது மக்களை மட்டுமல்ல நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளையும் கொச்சைப்படுத்துகின்றனர். இது நாட்டு மக்கள் என்றவகையில் எமக்கும் அபகீர்த்தியே!

இராவணா சக்தி போன்ற இனவாத அமைப்புக்களுக்கும் சம்பிக்க ரணவக்க போன்ற அமைச்சர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து அவர்கள் கூறியதற்காக நடவடிக்கை எடுக்கும் அரசு , அவர்கள் சார்பாக கருத்துக்களை தெரிவிக்கும் அரசுதலைவர் என இலங்கை நாட்டின் தேசிய நலன் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

பொறுப்புக்கூறல் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் இனங்களுக்கிடையில் பாரபட்சம் போன்ற விடயங்களில் நமது நாடு இவ்வாறு நடந்து கொள்வது அந்த நாட்டின் வரிகளை செலுத்தும் குடிமக்கள் என்ற ரீதியில் எமக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதில் வியப்பில்லை .இதை அரசு புரிந்து கொள்ளுமா?

இந்த வகையிலான நாட்டின் தேசிய நலன் பற்றி கவனம் செலுத்த வழியற்ற தமது அன்றாட வாழ்க்கைக்கு அடுத்தவேளை உணவுக்கு தீர்வு தேடிக்கொண்டிருக்கும் ஒருதொகுதி மக்களுக்கு அரசின் உதவிகள் அபிவிருத்திகள் நிச்சயம் தேனாமிர்தமாக இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.இது ஒருபுறமிருக்க

எல்லாவற்றுக்கும் நீங்கள் தான் காரணம் நாங்கள் தான் காரணம் என்று அரசு தமது பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பிரச்சனை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு உடனடியாக அவற்றுக்கு முடிவுகட்டி அபிவிருத்திப்பாதையில் சென்றால் நிச்சயம் இலங்கை ஆசியாவின் ஆச்சரியமாகலாம் பொருளாதார வளர்ச்சி பெறலாம்.இல்லையெனில் அது உலக அதிசயமாகவே இருக்கும் . எந்த விடயத்தில் உலக அதிசயம் என்பது தான் கேள்விக்குறி. மன்னர் மனம் மாறுவாரா? மன்னிப்பு கேட்பாரா?

-யாழ்ப்பாணம் வரவுள்ள மன்னருக்கு ஒரு வாக்காளரின் பகிரங்க மடல்

கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகமாணவர் பிரச்சனை தொடர்பான பதிவு ஒன்று மாணவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றது என நான் கருதுகின்றேன். பலர் பல்கலைக்கழகத்தினை தமது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துவதற்காக மறைமுகமாக தொழிற்படுகையில்அதற்கு இப்பதிவு துணைபோவதாகவே படுகிறது

கல்விக்கு ஒழுக்கம் பேணப்படவேண்டியது முக்கியம்

எங்கு தவறு நிகழ்ந்தாலும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதும் அவை தட்டிக்கழிக்கப்படக்கூடாது என்பதும் முக்கியம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதில் யாரும் விதிவிலக்கல்ல. மாணவர்களுக்கு அநீதி நடைபெற்றிருந்தால் அதை தட்டிக்கேட்டு இறுதி வரை பின்வாங்காமல் நீதி கேட்க வேண்டியது முக்கியம் .அதை அவர்கள் செய்யாதிருந்தால் அவர்களின் இயலாமை.பிறகெதற்கு ஒன்றியங்கள்?. அவரவர் பிரச்சனையினை அவரவர் சாரந்த சமூகங்கள் தட்டிக்கேட்பது பொருத்தமானதே! மற்றையதரப்பினர் கேட்கவேண்டும் என எண்ணுவது கையாலாகாத்தனம்!
.
இதேபோல விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டியது அவசியம். அவர்களது ஒன்றியங்களது கடமையும் கூட .பாவம் எதிர்காலம் பாதிக்கப்படும் அது மதுவெறியில் இடம்பெற்றது வழமையாக இடம்பெற்றது என்று எல்லாம் காரணம் சொல்லி தண்டணையில் இருந்து தப்ப முடியாது .நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே!

மாணவர்கள் குறித்த சம்பவ நாள் அன்று அடாவடி செய்தவேளை அவதானித்துக்கொண்டிருந்த பாதுகாப்பு கொடுக்க முற்பட்ட ஆண் பெண் விரிவுரையாளர்கள் கூட தகாத தூசண வார்த்தைகளால் பேசப்பட்டனர் உருளைக்கட்டடைகளால் தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு தடுக்கப்பட்டனர் என அறியமுடிந்தது. இதனை எந்தஒரு மனச்சாட்சி உள்ள மனிதரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் வம்பு என்று இன்னும் பல பெண் விரிவுரையாளர்கள் முறைப்பாட்டினை பதிவுசெய்யாமல் பின்னடித்துகொண்டிருக்கின்றதாகவும் அறியவருகின்றது

இதே விடயம் தென்னிலங்கையில் இடம்பெற்றிருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பர். ஒழுக்கம் எங்கு பிறழ்வு பட்டாலும் உரிய தண்டணைவழங்கப்படவேண்டும். தயவு செய்து இந்த பல்கலைநாதம் கணக்கினை நடாத்துபவர்கள் பொறுப்புணர்வுடன் தொழிற்படவேண்டும்.

ஒழுக்கத்தினை மீறி காட்டுமிராண்டித்தனமாக தொழிற்படும் இவர்கள் எப்படி நாளைய தலைவர்களாக முடியும்? எப்படி மக்களுக்கு அதிகாரிகளாக சேவை செய்ய முடியும்? எப்படி இனத்தின் அரசியல் இருப்பினை தீர்மானிக்கமுடியும். ? சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்காக ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது.

இதேவேளை மாணவர்களின் பிரச்சனையினை எப்படியாவது தமக்கு சாதகமாக்கிகொள்ள அரசில்வாதிகள் காத்திருப்பதால் என்னவோ ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை என நம்புகின்றேன்.

தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது!
கல்வியே எங்கள் மூலதனம்

குறிப்பு:- கடந்த வருடம் மாணவர்கள் காவல்துறையினரால் படைத்தரப்பால் தாக்கப்பட்டபோது மாணவர்களுக்காக ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமே குரல் கொடுத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” -வள்ளுவர்.


12-7-2013
வடக்கின் முதலமைச்சர் யாரவது வரட்டும் அவர்கள் தமிழினத்தின் தனித்தலைவராகிவிட முடியாது. கூட்டமைப்பின் பேசப்படும் 2 வேட்பாளர்களும் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கினை நிரூபிக்கவேண்டியும் உள்ளதை மறக்கக்கூடாது. முதலே அறிவிக்காமல் தலைமைவேட்பாளராக ஒருவரை நிறுத்தி பின்னர் மக்கள் விருப்ப தெரிவின் அப்படையில் முதலமைச்சரை தீர்மானிக்கலாம் என்பதே இப்போது எடுக்கக்கூடிய இராஜதந்திரம் இல்லையெனில் வாக்குகள் சிதறும்!

எனக்கு எப்போதும் சம்பந்தனின் தெரிவுகளில் சந்தேகம் இருக்கிறது. சுமந்திரனை சம்பந்தன்தான் கொண்டுவந்தவர் என்பதை மறக்கமுடியாது. அவரை மக்கள் தெரிவு செய்யவில்லை .சனநாயகம் உரிமை என்று காது கிழிய கதறும் கட்சித்தலைமை மக்களின் தெரிவையே மதிக்கவேண்டும். தேர்தலில் பெற்ற விருப்புவாக்குகளின் அடிப்படையில் முதலமைச்சர் தெரிவு இடம்பெறவேண்டும். முதலமைச்சரை யாரும் எமக்கு திணிக்க முடியாது.எனது தனிப்பட்ட விருப்பை இந்த விடயத்தில் முன் வைத்து வாதாட விரும்பவில்லை.

நமது நாட்டில் அரசியலுக்கு வாரதே சாக்கடைக்கு வார மாதிரி தான் இதில் நல்லது யார் கெட்டது யார் என்று முதலே கூறுவது கடினம் பதவி கொடுத்து பார்தால் தான் சுயரூபம் வெளிப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.முடிவடுக்கும் குழுவின் விருப்பு மக்களின் விருப்புக்கு விரோதமானதாக இருக்குமெனில் அதுவும் வேட்பாளருக்கான ஒரு உரிமை மறுப்பே!

தேர்தல் அறிவித்தபடியால் இனி மகாணசபை அரசமைப்பு மாற்றங்கள் நடைபெறாது நடைபெற்றாலும் அவை இம்முறை அமுல்படுத்தப்பட மாட்டாது. இந்த முறைமட்டும் தான் இந்த மகாணசபை முறைகூட இருக்கும் அடுத்தமுறை இதற்குபதில் இன்னும் வேலைக்குதவாத கிராமசபைகள் தான் இருக்கப்பபோகி்ன்றது. நம்மட ஆக்கள் எவனும் நேர்மையானவன் இல்லை. எல்லாம் குறுகிய அரசியல் இலாபம் நோக்கியே நடைபெறுகிறது. இதில் மாவை வந்தென்ன விக்கினேஸ்வரன் வந்தென்ன டக்ளஸ் வந்தென்ன தாயா மாஸ்டர் வந்தென்ன ஒன்றும் ஆகப்போவதில்லை எல்லாம் மன்னர் மனம் வைச்சால் தான் நடக்கும் ! ஆகவேண்டியதை பார்ப்பம்!

நான் விவாததத்தினை விரிவுபடுத்தவிரும்பவில்லை. ஒவ்வொரு பிரஜைக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கலாம் அதனுடன் ஓரளவுக்கேனும் ஒத்துப்போகும் கட்சிபற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் விமர்சிக்கும் உரிமை கொண்டிருப்பார்கள். அவற்றின் நலன் பற்றி கதைப்பார்கள் அது தான் ஜனநாயகம். எல்லோரும் அரசு கட்சிபக்கமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கமுடியாது தானே? அது சர்வாதிகாரம்.அதேவேளை மாற்றுக்கருத்துடையவர்களை நான் ஒருபோதும் துராகிகள் என்றும் அழைப்பதில்லை. என்னைப்பொறுத்தவரை அரசியல்வாதிகள் எவரும் புனிதர்கள் அல்லர். மத்தியில் மன்னர் நினைப்பது தான் நடைபெறும். அதுதான் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் சொல்லும் உண்மை. எவரும் குறிப்பிடத்தக்கதளவு செய்யமுடியாத ஒன்றை அல்லது இயல்பாக நாட்டு மக்களுக்கு கிடைக்காத ஒன்றை பெற்று தந்திருக்கவில்லை. அவர் என்ன செய்தார் இவர் என்ன செய்தார் என்பதல்ல முக்கியம் மன்னர் என்ன தருவாரோ என்பதுதான் எம் முன் உள்ள கேள்வி. தேர்தலில் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள் பார்ப்போம். இந்த மக்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான்

சுமந்திரன் யாரெண்டு சனத்துக்கு தெரியாது பாருங்கோ! அது சரி பேப்பர்கள் தொடங்குறது சரி வாங்கிறதுக்கு ஆட்கள் வேணுமே! இப்பதான் எல்லாரின்ர வீட்டிலையும் இணையம் இருக்கு!

15-7-2013
தமிழ்த்தேசிய அரசியலில் கிட்லராக வர்ணிக்கப்படக்கூடியவர் சம்பந்தர் என்றால் அது மிகையில்லை.வேட்பாளர்களாக நியமிக்கப்படவேண்டும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் ஏனையவர்கள் விரைந்து சம்பந்தனை சந்திப்பதே மேல். உங்கள் எம்பிமார்களால் முடியாது. மேலும் ஆங்கிலம் சட்டம் படித்திருந்தால் கை கொடுக்கும். கொழும்பில் படித்திருத்தல் வீடு வைத்திருத்தல் திருகோணமலை பூர்வீகம் எல்லாம் உதவும். நீதிபதிஉடன் நின்று பேச ஒரு தராதரம் வேன்ண்டாமா?. எது எப்படியோ கடைசியில் வாக்கு போடுவது என்னவோ மக்கள் தான்

17-7-2013
கிளிநொச்சியில் சாதாரண ஒரு தமிழ் பெண் சிங்கள இராணுவ அதிகாரியை விரும்பி திருமணம் செய்தால் துரோகி. கொழும்பில் நம்ம (முதல் அமைச்சர் )வேட்பாளர் மகன் மார் சிங்களப்பெண்களை திருமணம் செய்தால் புத்தி ஜீவிகள்! என்னங்கடா உங்க நியாயம்! சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதான் நீங்க செய்தது நல்லிணக்கம் புத்தி ஜீவித்தனம் என்றால் அவள்செய்ததும் நல்லிணக்கமே!

சரி வேட்பாளர் தெரிவிலாவது ஒழுங்கா ஒரேநாளில முடிவெடுப்பீங்களா அல்லது இவன் அவற்ற ஆள் இவற்ற ஆள் துரோகி புத்திஜீவி என்று வைச்சு இழுத்து கடைசயில காதில பூ சுத்துவீங்களா? ஒன்று மட்டும் உண்மை யாழ்ப்பாணத்திலேயே நிறைய மக்கள் மனமறிந்த (இவர்கள் விரும்பும் ?)ஆங்கிலப்புலமையுள்ள சட்ட அறிவுள்ள நிறையபேர் இருக்கினம் இவையள் முன்னாள் அதிகாரிகள் பேராசான்கள் ஆனால் அவர்களை எவரும் (உத்தமரை கேட்டது போல ) போய் கேட்கமாட்டார்கள் அவர்களாக விண்ணப்பித்தால் பதவியாசை என்பார்கள் வெறுத்துப்போய் ஒரு உத்வேகத்தில் சுயேட்சையாகவோ வேறுகட்சிகளிலோ கேட்டால் துராகி என்பார்கள்.இதுதான் இன்றைய கூத்தமைப்பு அரசியல்.

ஒன்றுமட்டும் இவர்கள் உணரவேண்டும் இதையெல்லாம் பாத்துக்கொண்டிருக்கும் மக்களாகிய நமக்கு மண்டையில் பகுத்தறியக்கூடிய மூளை இருக்கிறது. நேரம் வரும்போது பதில் கூறுவார்கள்.

”புத்திஜீவி ” என்ற சொல்லை யாருக்கும் புனைபெயராக கூறமுடியாது. பகுத்தறிவுள்ள அனைவரும் புத்திஜீவிதான். இதுக்குள் ஆயர் வேறு உத்தமர் அவர் என்று அறிக்கை விட்டிருக்கிறார் அதுதான் இந்த கடுப்பு. வேட்பாளர் தெரிஞ்சது சரியெண்டால் அதோட விடடுவிடவேண்டியது தானே ஏன் அதிக பிரசங்கித்தனம் மற்றவன் எல்லாம் அயோக்கியர்களா?. ”ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரை ” இது தான் உண்மையில் நடந்தது.

ஆயர் தமிழ்த்தேசிய அரசியலை தீர்மானிக்க முயல்வது அவ்வளவு சரியாக படவில்லை. ஆயர் அரசியல் கதைக்கலாம் என்றார் பிக்கு அரசியல் கதைப்பதிலும் தவறில்லைதானே! ஆக மொத்தத்தில் நடக்கின்ற கூத்துக்களை பார்த்தால் குருக்கள் XX விட்டால் குற்றமில்லை என்ற வாக்கியமே நினைவுக்கு வருகிறது.

ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். நான் எந்த ஒரு இடத்திலும் விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என கூறியிருக்கவில்லை. அவரும் பொருத்தமான ஒருவர் தான் என்பதை ஆரம்பம் முதல் தெரிவித்திருக்கின்றேன். ஆனால் அவரை தெரிவுசெய்ய கூறிய காரணங்களும் தெரிவு செய்த பின்னரான மன்னார் ஆயர் போன்றவர்களின் அறிக்கையும் தான் கடுப்பேத்துகின்றன. விக்கினேஸ்வரன் மற்றும் மாவை கூட அமைதியாக இருக்க இவர்கள் ஆர்ப்பரிப்பதும் அவரை விட்டால் எவரும் இல்லை என்று கூற விளைவதும் நியாயமானதல்ல. இங்கு யாழ்பாணத்தில் ஒரு சிறந்த நிர்வாகியினை நிறுத்தியிருக்க முடியும் இது மாவையாக இருக்க வேண்டியதும் இல்லை. இங்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் வந்து போகின்றனர் அவர்கள் மொழிப்பிரச்சனையால் அவதிப்பட்டு செல்லவில்லை.

சாதரணமக்களுக்கு ஒருசட்டம் அரசியல்வாதிகள் என்று தம்மைக்கூறிக்கொள்வோருக்கு ஒருசட்டம் இருக்கமுடியாது. கொழும்பில் இருந்துகொண்டுதான் ஆளவேண்டும் என்ற நிலை மாற்றப்படவேண்டும்.நம்மை நாமே தாயகத்தில் ஆளவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போராட்டமும் நடபெற்றது.

இங்குள்ளவர்களை அவர்கள் அடையாளப்படுத்தப்பவில்லை அல்லது அரச ஆதரவு முத்திரை குத்தப்பட்டு விட்டிருக்கின்றனர் ஆனால் கூத்தமைப்பு உறுப்பினர்கள் அரசுடன் கொஞ்சி குலாவுகின்றனர். தமது குடும்பங்களை கொழும்பிலும் வெளிநாட்டிலும் வைத்திருக்கின்றனர்.இந்நிலையில் இங்குள்ளவர்களை அவர்கள் சாதாரணமக்களாயினும் அதிகாரிகளாயினும் அரசியல்வாதிகளாயினும் சோரம்போக்கூடியவர்கள் என்று அடையாளப்படுத்துவதில் முன்னிற்கும் ஊடகங்களும் கூத்தமைப்பின் தலைமை அடிவடிருடிகளும் தமிழ்மக்களின் எதிர்காலம் அது இது என்று கூறி ஒரு மாயையினுள் மக்களை வைத்திருக்க விரும்புகின்றனர்.ஊருகடி உபதேசம் உனக்கல்ல என்பதுதான் அவர்களது அரசியல்.

பகுத்தறிவுடன்நோக்கினால் கூத்தமைப்பு வெறும் சூனியம்தான் இதயசுத்தியுடன் நல்லதொரு விஞாபனத்துடன் நல்ல கட்டமைப்புடன் இறங்கினால் சுயேட்சையாகவும் போட்டியிட்டு வெல்லமுடியும.அரசு சார்பு கட்சியாகக்கூட இருக்கவேண்டிய அவசியமில்லை . அரசு கட்சிகளும் ஏதோ செய்யமுடியத அல்லது ஒரு நாட்டுமக்களுக்கு அரசு வழங்காத ஒன்றை அபிவிருத்தி என்ற பெயரில் வழங்கியதாக பிரச்சாரப்படுத்துகின்றனர்.

கூட்டமைப்பு மாயை நீண்டநாட்களுக்கு செல்லாது.கூட்டமைப்பும் எல்லாவற்றையும் கைவிட்டு 13ம் திருத்தத்தின் கீழ்தான் மகாணசபைத்தேர்தலில்போட்டியிடுகின்றது என்பதை நினைவில்கொள்ளவேண்டும். இம்முறை முதல்தரம் அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது பலர் அமைதியாக உள்ளனர். சகல தேர்தல்களிலும் சந்தர்ப்பங்கள் வழங்கிவிட்டாயிற்று. இது ஒன்றுதான் பாக்கி அதையும் ஆடிப்பார்க்கட்டும். அவர்கள் எமக்கு ஒரு தீர்வையும் பெற்றுத்தரமாட்டார்கள்.

இதுதான் கூட்டமைப்பினரின் அரசியல் என்றால் இனிவரும்காலங்களில் நிறைய கட்சிகள் உதிக்கும் பலர் போட்டியிடுவர் என்பதில் ஐயமில்லை.இதை எவரும் குறை கூற முடியாது.அரசியல் கொழும்பில் குளிரூட்டிய அறைகளில் இருந்துதான் செய்யவேண்டும் என்பதில்லை.அதேபோல முகப்புத்தக போராளிகளினால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதுமில்லை. ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தல்களினால்மட்டும் வழிநடாத்தப்படுவதுமில்லை. இது சகல மக்களின் பங்களிப்புடன் சம்பந்தப்பட்டது.
காலம் பதில்சொல்லும் .வழமைபோல மக்களில் ஒருவனாக காத்திருக்கின்றேன் தேர்தலில் வாக்களிக்க!


உங்கள் வாதத்தினை முற்றாக மறுதலிக்கின்றேன். உங்கள் புத்திஜீவித்தனத்தினை குப்பையில் போடுங்கள் நீங்களும் நீங்கள் முன்வைக்கும் ஒருசிலரும் கொழும்பில் உள்ளவர்களும் மட்டும் தான் அரசியல் மேதாவிகள் என்ற கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாதது.

சுத்திச்சுத்தி பல்கலைக்கழகத்திற்குள் மட்டும் ஆட்கள்தேடுவதும் அதனை விமர்சிப்பதும் உங்கள் வழமையாக உள்ளது. ஆளைக்காட்டு என்று கேட்கும் நீங்கள் அந்த ஆளை நியமிக்கும் திறன் உடையவராயிருக்கவேண்டும்.உங்களுக்கு நான் ஆட்கள் பிடித்தத்தரவேண்டும் என்பதல்ல. அது எனது வேலையும் இல்லை. தயவுசெய்து நீதிபதியை நியமித்ததற்கு நீங்கள் உரிமை கோர வேண்டாம் அதில் பல அந்தரங்க விடயங்கள் உள்ளன அது சம்பந்தனுக்கு மட்டுமே வெளிசச்சம். உங்கள் உப்புச்சப்பற்ற குழந்தைப்பிள்ளைத்தனமான ஊகங்களுடனான கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய அவசியமில்லை.

தமிழ்த்தேசியம் தொடர்பில் உங்களைவிடவும் மேலான அக்கறை எனக்கு உள்ளது.அதை உங்களிடம் நிரூபிக்கவேண்டியதில்லை. எனது வாதமே வேறு நீதிபதியின் வரவை எதிர்ப்பதல்ல அதை கொண்டாடும் விதம் தான் வலிக்கிறது. பிரதீப் கூறியவாறு தற்போது நாம் இக்கட்டான சூழலிலில் இணைந்து போகின்றோம் ஆனால் இப்படி தொடர்ந்து கபடி ஆடலாம் என்று கூட்டமைப்பு எண்ணுமானால் அது முட்டாள்தனமானதாக இருக்கும் மக்கள் முட்டாள்களல்ல.காலம் பதில்சொல்லும்.கொள்கை இல்லாதவர்களுடன் ஊகங்களின் அடிப்படையில் விவாதிக்க நான் தயாரில்லை

தமிழ்த்தேசியம் என்று கூறி கூட்டமைப்பு தலைவர்களால் எடுக்கப்படும் தான்தோன்றித்தனமான முடிவுகள் ஒவ்வொன்றின்போதும் ”தமிழ்மக்களின் எதிர்கால நலன் கருதி” அநுசரித்துச்செல்வோம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அவர்கள் கூறும் தமிழ்மக்களின் எதிர்கால நலன் அங்கு ஒருபோதும் கவனத்தில் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அம்மக்களின் கருத்துக்களை மதிக்காத எதிர்கால நலன் கருதிய செயற்பாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானது. எதற்கெடுத்தாலும் தலைவர் செய்தார் சொன்னார் என்று அந்த ”மயிர் நீர்ப்பின் உயிர் வாழாக்கவரிமான்” மனிதரை உங்கள் உப்புச்சப்பற்ற தேசியத்துக்கு பக்கப்பாட்டுக்கு இழுக்காதீர்கள்.

அறிவியல் பற்றி எனக்கு பாடம் நடாத்தவேண்டாம்.புத்திஜீவித்தனம் என்று இல்லாத ஒன்றை வைத்து சிலர் பிழைப்பு நடத்தமுயல்கிறார்கள். தமக்கு விரும்பாத செயலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டவேளைகளில் செய்யக்கூடாது என்பதற்காக பலர் தமது பதவிகளை எறிந்துவிட்டு வந்த சம்பவங்கள் நிறைய உண்டு.உதாரணத்துக்கு இந்த பயங்கரவாததடைச்சட்டத்திற்ன் மூலம் தமிழர்களை உள்ளே தள்ளுவதற்கு கருவியாக இருக்கும்போது இந்த தமிழ் தேசிய வாதி என்னசெய்தார் ? இது ஒரு உதாரணம் உண்மையில் அவரின் திறமையினையோ தெரிவையோ நான் இதன்மூலம் கேள்விக்குட்படுத்த விரும்பவில்லை.

பிரதேசவாதம் நான் பேசவில்லை. போராட்டமே பிரதேசங்களையும் இனத்தினையும் மொழியினையும் மையமாககொண்டதே.அப்படி ஒன்றும் இல்லையென்றால் கோத்தாவின் கருத்த இங்கு நிரூபிக்கப்பட்டுவிடும்.ஒரே தேசம் ஒரே நாடு என்று சம்பந்தருடன் தேசியக்கொடியை பிடிக்கலாம். அதாவது ” இலங்கை எல்லோருக்கும்சொந்தமானது எங்கும் யாரும் வாழலாம் அரசியலில் ஈடுபடலாம்” இதுதான் கோத்தாவின் வாதம். கூட்டமைப்பு தமிழீழத்தின கைவிட்டு கனகாலம் இன்னும் சிலவருடங்களில் இனத்தினையும் கைவிடும். கொழும்பில் இருந்து கொண்டு வடக்கில் வாக்குரிமை இல்லாத ஒருவர் இங்கு வடக்கு நிலமை பற்றி பேசமுடியாது. மக்களின் தெரிவுகளை மதிக்காத தான்தோன்றித்தனமான முடிவுகளால் கிழக்குமாகாணத்தில் நாம் இடைந்த தோல்வியை மறக்கவே முடியாது.

மக்களை தொடர்ந்தும் மந்தைகளாக கணிக்காதீர்கள் ”சாது மிரண்டால் காடு கொள்ளாது” சுயநலன் கருதாத ஆளுமை யாழ்பாணத்தில் இல்லை என்று கூறுவதன்மூலம் நீங்கள் உங்கள் புத்திஜீவித்தனத்தினை நிரூபித்துவிட்டீர்கள். மக்கள் பதில் சொல்வார்கள் காத்திருங்கள்

எது எப்படியோ வடமாகாணசபை தேர்தல் முடிவுற்றதும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் அரங்கேற காத்திருக்கின்றன 13வது திருத்தினை எமது வேட்பாளர்கள் மேலோட்டமாகவேனும் ஒரு தடவை வாசித்துவைத்திருப்பது அவசியம்.

21-7-2013
மக்களின் மாகாணத்தின் அபிவிருத்தி உள்ளிட்ட இதர தேவைகளை நிறைவேற்ற மத்தியில் பெரும்பான்மையின அரசுடன் இணைந்து இயங்கும் அரசியல்வாதிகள் தமது இருப்புக்களை முன்னிறுத்தி எமக்கு உதவி வருகின்றமை என்னவோ உண்மைதான்.இவர்களும் ஒரு சிலர் தேவைதான். இருப்பினும் இவை ஒன்றும் எமக்கு கிடைக்ககூடாதனவல்ல வரிப்பணத்தில் இயங்கும் அரசு தனது நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டியதைத்தான் தாமதித்து வழங்குகின்றார்கள்

எது எப்படியிருப்பினும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு துணிந்து அரசுக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய ஒரு உரிமைக்கட்சியாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மட்டும் தான் இருக்கின்றது என்பதை எவரும் மறுக்கமுடியாது. அங்கு நடைபெறும் கூத்துக்கள் பலவேளைகளில் கூட்டமைப்பினை கூத்தமைப்பாக மாற்றுவது என்னவொ உண்மைதான். இக்கட்சிக்கான மாற்றுப்புலம் ஒன்று இன்னும் ஒரு புதிய கட்சியினால் ஈடுசெய்யப்படும் வரை பெரும்பான்மையான தமிழ் மக்களின் பயணம் கூட்டமைப்பின் ஊடாக தான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.ஆனால் அதை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். துஸ்பிரயோகம் செய்யக்கூடாது.

முதலமைச்சர் தெரிவில் நடந்த இழுபறிகளை விட தெரிவின் பின் வெளியிடப்படும் வர்ணனைக்கட்டுரைகள் அறிக்கைகள் தான் எம்போன்றவர்களை கடுப்பேத்திவருகின்றன.மற்றப்படி விக்கினேஸ்வரன் பொருத்தமற்றவர் என்ற கருத்தை நான் கொண்டிருக்கவில்லை.இன்று தினக்குரலில் காலகண்டன் விக்கினேஸ்வரனை கடவுகளாக குறிப்பிடாதது ஒன்றுதான் பாக்கி மற்றப்படி சகல துதிபாடல்களையும் செய்திருக்கின்றார்.சாதியைக்கூட விட்டு வைக்கவில்லை.அதை அடிப்படைத்தகுதியாக வர்ணித்திருக்கின்றார்.இன்றைய பல கட்டுரைகள் ஒரே ஆளைப்பற்றியே வரையப்பட்டுள்ளன. அதன் காரணமாக நான் பல கட்டுரைகளை வாசிக்கவே இல்லை . இவ்வாறான ஒரே கருக்கொண்ட கட்டுரைகளை தவிர்க்கவேண்டும்

இதுவரை கூட்டமைப்புக்காகத்தான் மக்கள் வாக்களித்தனரே தவிர ஆட்களுக்காக வாக்களிக்கவில்லை. முதன்மை வேட்பாளர் தெரிவின் முக்கியத்துவம் அரசுக்கும் வெளியுலகுக்கும் தெரியவேண்டுமே தவிர எமது மக்களுக்கு தேவையில்லை.இப்படி ஒருவரைப்பற்றி தொடர்ந்து கட்டுரை எழுதவேண்டுமாக இருப்பின் அவரைப்பற்றி மக்களுக்கு அடையாளம் தெரியாது என்று பொருளாகிவிடும். அவர்களுக்கு யாரும் யாரைப்பற்றியும் பாடம் நடாத்த தேவையில்லை. விசனத்துடன் உள்ள அவர்களுக்கு கூட்டமைப்பு வெல்ல வேண்டியதன் அவசியத்தினை வேண்டுமானால் இனி விளக்க முயற்சிக்கலாம்.

கிழக்கில் ஏற்பட்ட கதி கூட்டமைப்புக்கு வடக்கில் ஏற்படக்கூடாது. அதை நிவர்த்தி செய்ய வேட்பாளர் தெரிவில் நிதானத்துடன் நடந்துகொண்டு வெற்றிபெற்று முதலமைச்சரைக் கூட கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்க கூட்டமைப்பு முயலவேண்டும். எது எப்படியோ முடிவை நாம் தீர்மானிக்க முடியாது மக்கள் தீர்ப்பை மதிக்கவேண்டும்.

இன்றைய உதயனைப்பார்த்தால் சிவிகே மீது நேரடியாக தாக்கியுள்ளது சரியாகப்படவில்லை. ஏதோ பாதிக்கப்பட்டவர்கள் போலவும் எதிர்பார்த்தது கிடைக்காததுபோலவும் அதனால் நொந்து எழுதியது போலவும் அந்த அரசியல் பத்தி அமைதிருக்கின்றது. ஒருதலைப்பட்சமாக இக் கட்டுரை தனிநபர் தாக்குதலாக வரையப்பட்டிருக்கின்றது வருந்தத்தக்கது.

ஊடகங்கள் நடுவுநிலமையுடன் இருந்தாலே போதும் மக்கள் தீர்ப்பு எழுதுவார்கள்.ஊடகங்கள் கட்டுரைகளை பிரசுரிக்கும்போது கவனமாக இருப்பது நல்லது. கூட்டமைப்பின் வெற்றிகளை கட்டுரைகள் கூட குழப்புகின்றன. விசனமடையும் மக்கள் தான் ஒருத்தனும் வேண்டாம் என வாக்களிப்பனை புறக்கணிக்கின்றமை கடந்து வந்த வரலாறு. இது எதிர்த்தரப்புக்கு சாதகமாகும்.

25-7-2013

தமிழ் சிவில் சமூகம் என்ற  அமைப்பின் ஒருவருடத்திற்கு முந்திய கிழக்குமாகாணம் தொடர்புபட்ட செய்தியையும் வாசித்தேன். ஆழமான தேடல்தான் ஆனால் போட்டியிடுவதெண்டு முடிவெடுத்தாச்சாம் இனி சுயேட்சையென்ன கட்சியென்ன எல்லாம் ஒன்றுதான்! வெளிநாட்டுக்காரனுக்கு தேர்தல் நடந்தா சரி. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்! :-) தேர்தல் முடியட்டும்! (கிழக்கு மாகாண சபையில் இன்னும் கூட்டமைப்பு இருக்கினம் ஞாபகம் இருக்க்கட்டும்)

எந்த சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என்பதல்ல முக்கியம் எதற்காக,எந்த அரசியல் அமைப்பின்கீழ் போட்டியிடுகின்றோம் என்பதே! இதே மாதிரித்தான் பாராளுமன்ற உள்ளுராட்சி தேர்தல்களிலும் சொன்னார்கள் இறுதியாக கிழக்கிலும் சொன்னார்கள் நடந்தது என்ன? இப்போதுள்ள கேள்வி அதுவல்ல எமது உண்மையான இறுதி நோக்கு என்ன வென்பதே! எந்தவழியிலாயினும் மக்கள் இந்த நோக்குடையவர்களின் பின் உள்ளார்கள் என்று காட்டவேண்டும்.அதனை எவரும் சரியாக செய்வதாக படவில்லை இந்த இடத்தில் இலுப்பம்பூ சர்க்கரையாக கூட்டமைப்பு இருந்து காலத்தை ஓட்டுகிறது அவ்வளவுதான்

தேர்தல் ஊடாக அரசியல்போராட்டம் இது தான் காலம் காலமாக நடைபெறுகிறது. இதில் பெரிய மாற்றம் இல்லை.அப்போது பக்கபலமாக ஆயுதப்போராட்டம் இருந்தது இப்போது அது இல்லை.வெளிநாட்டுக்காரன் வருவான் காப்பாத்துவான் என்பது ஒரு ஆசை அது இப்போது அதட்டலுடன் வேட்பாளராக ஆளை க்காட்டுவதுடன் முடிவுறுகிறது.அவனுக்கு ஆதாயம் கிடைக்கும் வரை ஆட்டுவான்எ நமது தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் மேடையில் விரலை ஆட்டுவார்கள் நாம் .... எல்லாம் ஒரு காலத்துக்குதான் பார்ப்போம். மீண்டு்ம் சொல்கின்றேன் விக்கிரமாதி்த்தனாக....தமிழர்கள் பலத்துடன் இருக்கவேண்டும் ஆகவே வெல்ல வேண்டும் (வேதாளம் பழையபடி முருங்கை மரத்தில்).

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலமொழிகவழிக்கல்வி தொடர்பில் அண்மையில் பலரிடையே வாதப்பபிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. இது தொடர்பில் நானும் முகப்புத்தகத்தில் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றேன் அவற்றினை இங்கே தொகுக்கின்றேன்.

இரு மொழி வழிக்கல்வியையும் அறிமுகப்படுத்துவதில் தப்பில்லை. எமது இலங்கை நாட்டிலும் இரண்டு மொழிகளிலும் விரும்பிய மொழியில் கல்விகற்கும் முறைமை தேர்ந்தெடுக்கப்பட்ட வளமுள்ள பெரிய பள்ளிகளில் அறிமுகப்படுத்தபட்டுவிட்டது. அதை தெரிவுசெய்யும் உரிமை என்னைப்பொறுத்தவரை பெற்றோர்களை விட மாணவர்களிடம் வி்ப்படுவதே மேலானது என நான் கருதுகின்றேன். 

தாய் மொழியில் கற்கும் சுக அனுபவமும் புரிதலும் வேற்றுமொழியில் கிடையவே கிடையாது.இதை மறுதலிப்பவர்கள் சுத்த முட்டாள்கள்.வரட்டுக்கௌரவம் கொண்டவர்கள் என்றே நான் கூறுவேன். தாய்மொழிக்கல்வியில் சிறந்த அபிவிருத்தியை பெற்ற தேசங்கள் நிறைய உண்டு.இதற்கு யப்பான் சீனா நாடுகள் சிறந்த உதாரணம் .

ஆங்கில அறிவு வேண்டும் அது ஒரு மொழிக்கல்வியாக கற்பிக்கப்படவேண்டும் அதன் முக்கியத்துவமும் மாணவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும்.அதற்காக தமிழ் மொழியில் கற்றவர்கள் நல்ல நிலையில் இல்லை வேலைவாய்ப்பில்லை என்று கூறுவதெல்லாம் யாரையோ திருப்திப்படுத்த முன்வைக்கப்படும் வாதங்கள்.

ஆங்கிலமொழிக்கல்வியை முற்றாக எதிர்பவர்களுக்கு எதிராக இங்கு கருத்துக்களை முன்வைப்பவர்கள் சரியாக காரணங்களை முன்வைக்கவேண்டுமே தவிர தாய்மொழிக்கல்வியையும் அதனை பெற்றவர்களையும் கொச்சைப்படுததும் வகையிலும் வாதம்செய்யக்கூடாது.

எனது குடும்பத்தில் சகலரும் தாய்மொழியில் கல்வி கற்பதையே ஊக்குவிப்பேன் அத்துடன் ஆங்கிலமொழிக்கல்வியை இரண்டாம் பாடமாக ஊக்குவிப்பேன்.அரசாங்கங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் பொதுநலன் அப்படையில் தான் திட்டங்களை முன்மொழியவேண்டும்.ஒரு சிலரின் நலன்களுக்காக தொழிற்பட முடியாது.

என்னைப்பொறுத்தவரை அரசுகள் தாய்மொழிக்ல்வியை ஊக்குவிகவேண்டும். இதேவேளை ஆங்கிலமொழிக்கல்வியை விரும்புவர்களின் உரிமையினை மதித்து சந்தர்ப்பங்களை வழங்கவேண்டும் அவ்வளவுதான்.அதற்காக ஆங்கிலமொழிக்கல்வி தான் இனித்தேவை என்ற வாதம் முன்வைக்கப்படக்கூடாது


அனுபவத்தில் அறிந்த உண்மை தான் நான் கூறுவது என்னுடைய நண்பர்கள் மாணவர்கள் என்னுடைய ஆசான்கள் மூத்தவர்கள் மற்றும் நான் முன்மாதிரியாக பார்க்கின்ற மனிதர்கள் ஏன் கண்டுபிடிப்புக்களை செய்த விஞ்ஞானிகள் அனைவரும் தமது சொந்த தாய்மொழியில்தான் தொடக்க கல்விபயின்றவர்கள். அவர்கள் எவரும் கெட்டலைந்துபோகவில்லை. 

தமிழ்மொழிக்கல்வியை வற்புறுத்துபவர்களை நாம் பிரித்துப்பார்க்கமுடியாது.குறிப்பாக அரசியல்வாதிகளை நாம் கணக்கில் எடுக்கவே தேவையில்லை அவர்கள் மக்களின் எண்ணஅலைகளுக்காக பேசுகின்றவர்களே தவிர அவர்களின் சொந்த வாழக்கைக்கும் பேசுவதற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. எதையும் நாம் பகுத்தறியும் போக்கும் இருக்கவேண்டும். அவர்கள் ஆங்கிலமூல கல்வியை கற்றுவிட்டு பேசுகின்றார்கள் என்பதற்காக உண்மைகளை நாம் மறைக்கமுடியாது.

ஒரு தமிழராக உங்கள் மனச்சாட்சியை தொட்டுச்சொல்லுங்கள். ஆங்கிலத்தில் ஒன்றைப்பற்றி ஒரு வல்லுனர் எங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார் அதனையே தமிழிலும் அழகாக விளங்கப்படுத்துகின்றார் எனில் எது உங்களுக்கு கூடுதலாக புரியும் ?

 நான் கணினி படித்தேன் தொடக்கத்தில் ஆசிரியா் தமிழில் கற்பித்தார் மேற்படிப்புக்கு வரும்போது ஆங்கில மூலம் தான் கற்பிக்கப்பட்டது. எனக்கு நான் தமிழில் கற்றதை வித ஆங்கிலத்தில் கற்றதில் புரிதல் குறைவாக இருந்தது. அதேவேளை நான் சிறுவயதில் கற்ற ஆங்கில மொழி ஆங்கில மூலம் பின்னர் கற்க வழிசெய்தது. இப்போதும் தமிழில் நான் எனது மாணவர்களுக்கு விளங்கப்படுத்தும்போது அவர்களுக்கு புரிகிறது. ஆங்கில மொழி மூலத்தில் பலருக்கு பரீட்சைக்கு விடை எழுதும்போது தெரிந்ததை எழுத முடியாமல் திணறுகின்றனர் இதேபோல தெரிந்ததை சொல்லமுடியாமல் திணறுகின்றனர். எல்ல வகையிலும் தாய்மொழி தவிர்ந்த மொழிகளில் கற்றல் நடவடிக்ககைகள் செய்யும்போது மனப்பாடம் தான் முன்னிலை வகிக்கின்றது. புரிதலுடன் கூடிய பிரயோகம் பின்னிற்கிறது.

சிறந்த வளவாளர்கள் இருந்தால் தாய்மொழிக்கல்வி சிறப்புப்பெறும்.அதற்கு தாய்மொழிப்புலமையுள்ள வளவாளர்கள் இல்லாமல் போவது தான் காரணம் ஆகமொத்தத்தில் தாய்மொழிக்கல்வி தரம் குறைவதற்கு வேற்றுமொழிக்கல்விதான் காரணமாகின்றது. அதற்கு தமிழர்களின் வரட்டு கௌரவம் வழிசெய்கிறது.

தமிழ்மொழிமூலக்கல்வி என்று சொல்வதை விட தாய்மொழிமூலக்கல்வி என்று கூறுவதே சிறந்தது. இன்று எமது மொழி சிதைக்கப்படுவதற்கு ஊடங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவைகள்தான் பல்வேறுவழிகளிலும் மனங்களை மாற்றி ஏதோ ஆங்கிலம் மற்றும் ஆங்கிலமொழிக்கல்வி தான் எதிர்காலம் என்ற எண்ணத்தினை மாற்றாமல் விதைக்கின்றன. அவைமாறினால் தான் மனங்கள் மாறும்.இந்த நிலமை இந்தியாவில் கூடியதாக்கத்தினை ஏற்படுத்திவிட்டது நீண்டதூரம் பயணித்தும் விட்டது. இலங்கையில் அப்படிஒரு நிலை வரும் என்று நான் எண்ணவில்லை.

இது நிற்க ஆங்கிலமோழிமூலக்கல்வியை தெரிவுசெய்பவர்களது உரிமையினை மறுப்பதிற்கில்லை இது அவர்களின்விருப்பம். ஆனால் அது தான் இனி எதிர்காலம் அது அன்றி சாதிக்கமுடியாது என்பது ஏற்கமுடியாத வாதம்.


தொடக்ககல்வியின் தரம் பேண நவீனம் புகுத்தப்படவேண்டும். அந்த நவீனம் ஆங்கிலமல்ல! தொழில்நுட்பம் மற்றும் பௌதீகவளம் ஆகியவற்றில் தான் அந்த தேவை உள்ளது இதை செய்யுங்கள். தரம் மேலோங்கும் . அதை விடுத்துஆங்கிலம் தான் வாழ்க்கையிலும் கல்வியிலும் நவீனம் என்பது சுத்த மடத்தனம்!

ஒரு கற்கைநெறியினை எந்த மொழியில் கற்றோம் என்பதல்ல பிரச்சனை அதை எந்தளவுக்கு புரிதலுடன் கற்று அந்த கற்கைநெறியின் இலக்கினை அடைந்தோம் என்பதுதான் பிரச்சனை இதனை ஒவ்வொருமட்டத்திலும் இருக்கின்றவர்கள் உணராதவகையில் ஆங்கில மோகத்தினை தடுக்கமுடியாது. இசைக்கு போல அறிவுக்கும் மொழி கிடையாது என்பதை நாம் உணரவேண்டும். இலகுவாக அறிவைப்பெருக்க வழியிருக்கையில் ஏன் இந்த மேட்டிமை மொழி மோகமோ!

தமிழை வாழ வைப்பதற்கும் தமிழில்(தாய்மொழி) கல்விகற்பதற்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது  மாணவர்களுக்கு ஆங்கிலக்கல்வி அவசியம் எ்னபது உண்மை அதற்கு ஆங்கில மொழியை நன்றாக கற்பிக்கக்கூடிய ஆசான்களை நியமியுங்கள் அதை விடுத்து பைத்தியக்காரத்தனமாக கருத்து தெரிவிக்கவேண்டாம்.உங்களுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்றால் வரவேற்றுக்கொள்ளுங்கள் .அது உங்கள் உரிமை இரண்டு மொழிக்கல்வியியும் அறிமுகப்படுத்தலாம் அதற்காக இப்படி தாய்மொழிக்கல்வியை கேவலப்படுத்தாதீர்கள்


ஊடகங்கள் என்று சொல்லிகொள்வன முதலில் விபச்சாரம் என்பதற்கான வரைவிலக்கணத்தினை தெரிந்து கொள்ளவேண்டும். தமது தளத்தினையோ ஊடகத்தினையோ பிரபல்யப்படுத்துவதற்காக யாழ் பெண்கள் குறிப்பாக மாணவிகளை அனைவரையும் விபச்சாரிகளாக சித்தரிக்கும் முயற்சியில் சில இணையத்தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.தமிழ்தேசிய ஒருமைப்பாடுகுறித்த குளறும் இணைய ஊடகம் கூட அதைத்தான் செய்கிறது. அதை ஊடக விபச்சாரமாக கொள்ளலாம்.

தவறான உடலுறவுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பது உண்மையே! மன்மதராசாக்கள் மற்றும் மயங்கும் பெண்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்கு சரியான பாலியல் கல்வி ,விழிப்புணர்வுக் கல்வி வழங்கப்படவேண்டும் .தவறான உறவுகளை காதல் வயப்படுதல்களை தடுக்கும் வகையிலான ஆக்கங்களையோ ,ஆய்வுகளையோ விழிப்புணர்வுப்பிரச்சாரங்களையோ அவைகள் சரியான முறையில் முன்னெடுப்பதில்லை . உதாரணங்களை பட்டியல்படுத்தும் கட்டுரைகளை தான் வெளியிடுகின்றன.

மைனர்களின் லீலைகள் இன்றுமட்டுமல்ல இங்குமட்டுமல்ல அன்றும் எங்கும் நடந்தவை நடப்பவைதான் அதை குறைக்க நிறைய வழிகள் உள்ளன.  கலாச்சாரம் கலை என்பன வேறு பதங்கள் இவற்றினை இங்கு கொண்டுவந்து குழப்பிக்கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்ப மட்டத்தில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வுகளை செய்து வர படிப்படியாக தவறான நடத்தைகள் குறையும். மனித சமூகத்தில் அதனை அறவே அழிக்கமுடியாது.

ஒன்றை நடவாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் நடந்தபின் இன்னொருமுறை நடாவாமல் இருப்பதற்குரிய வழிசெய்யப்படவேண்டும் தவிர இப்படியெல்லாம் செய்யலாம் என்ற தகவலை வழங்குவதாக அமையக்கூடாது.

ஆனால் ஒ்ன்றை அறிந்தவுடன் அனைத்தையும் செய்தியாக்குவதில் குறியாக உள்ளன.பாதிக்கப்படுபவர்கள் குறித்து துளியேனும் கவலைப்படுவதில்லை. மாணவி அல்லது மாணவன் என்று அடைமொழி வேறு போடுவார்கள்.படங்களையும் போடுகிறார்கள். கமெரொ தூக்கியவன் எல்லாம் ஊடகவியலாளன் அல்ல.ஊடகவியலாளர்களின் போக்கை பாரக்கும் போது செய்தி ஒன்றை வெளியிடும் நேர்த்தி குறித்து எந்த ஊடக பயிற்சிமையமும் பயிற்சிவழங்குவதாக உணரமுடியவில்லை!.

வடமாகாணதேர்தலுக்காக  தயவுசெய்து தமிழினைத்தின் கற்பை விற்காதீர்கள். உண்மையில் எங்கு  இனி நடக்கும் என்று அலைவதை விடுத்து அப்படி நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். காவல்துறையும் அதைத்தான் செய்கிறது.கலாச்சார(?) காவலர்களும் கண்டுபிடிப்பதற்காகத்தான் அலைகிறார்கள் . குற்றங்கள் காணாமல்போவதற்கு வழிசெய்யவில்லை. அதை யாராவது செய்தார்களா? செய்வார்களா? தண்டணைகளும் அவமரியாதைகளும் ஒரு போதும் குற்றங்களை குறைக்கப்போவதில்லை!

எதிர்ப்பரசியல் எதையும் தராது!

Posted by Thava வியாழன், 28 மார்ச், 2013 0 comments


தி.மு.க அரசியில் இருந்து விலகியிதால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்று கேட்கும் கருணாநிதியின் கருத்துக்களில் சில நியாயங்களும் இருக்கத்தான் செய்கிறது. எவரும் இதய சுத்தியுடன் ஒன்றையும் செய்யவில்லை என்பதையும் நாம் அறிவோம். யதார்த்தங்களை உணர மறுப்பதையும் நாம் அறிவோம். எமது பிரச்சனையினை தமது அரசியலுக்கு தேவையான அளவுக்கு இந்தியாவும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பயன்படுத்திவருகின்றமைதான் கண்கூடு. இதையே நாம் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்

எது எப்படியிருப்பினும் 2009 இல் தி.மு.க வெளியேறியிருந்தால் ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மையே தவிர இந்திய நடுவண் அரசு கவிழ்ந்திருக்கும் என்பது உண்மையில்லை.அதுதான் இம்முறையும் நடந்திருக்கின்றது.

ஆனால் இங்கு முகப்புத்தகங்களில் இந்திய ஊடகங்களில் எமக்கு தரப்படும் தகவல்கள் தி.மு.க விலகியிருந்தால் ஈழத்தில் கொடூரம் நடந்திருக்காது என்று கூறமுனைந்திருந்தன இந்த கருத்துக்களால் ஒருவகையில் நானும் ஈர்க்கப்பட்டிருந்தேன். இது நடுவண் அரசில் தி.மு.க வின் பலம்  குறித்தான எமது அறியாமையின் வெளிப்பாடாகவும் கொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கும் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை இக்கருத்துக்களில் பல , கட்சி எதிர்ப்பரசியலை மையமாககொண்டவை என்பதே உண்மை.

இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் தமிழ்நாட்டுக்கட்சிகள் இன்றும் தமிழீழ உணர்வலைகளை தேர்தலை நோக்கிய தமது  கட்சியரசியலுக்கு தாரளமாக பயன்படுத்திவருகின்றன. புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் இருந்து தமக்கான ஆதரவுத்தளத்தினை வலுப்படுத்தி வருகின்றன.

இன்னும் ஒருநாட்டில் தனிநாடு அமைக்க அயல்நாட்டில் இருக்கும் மக்களால் முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.இதற்கு தற்போதுள்ள உலக அரசியல் போக்கு இடம்கொடாது என்பதுதான் உண்மை. ஒருவேளை  எங்களுக்கு ஒரு அரசியல்தீர்வினை பெற்றுக்கொள்ள இவர்களின் போராட்டங்கள் வழிவகுக்கலாம்.

இதை உணராமல் மேலெழுந்தவாரியாக எல்லாவற்றையும் எதிர்ப்போம் என இறங்கக்கூடாது என்பது என்கருத்து. எதையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தபின்னர் முடிவெடுக்கவேண்டும். யாரோ சொன்னார்கள் என்பதற்காக Airtel நிறுவனத்திற்கு எதிராகவும் போராட்டம் நடாத்தப்படுகிறது. அப்படிப்பார்த்தால் இந்தியாவில் முக்கால்வாசி நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டும் இங்கு நாம் சகல தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் எதிர்க்கவேண்டியிருக்கும். அதன்காரணமாக நாம் தொலைபேசி சேவையினை புறக்கணிக்க வேண்டியிருக்கும். அது எந்தவகையில் எமக்கு நன்மையினை தரப்போகிறது என சிந்தித்தால் ஒன்றும் இல்லை என்றே பதில் கிடைக்கும்.

தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்ச்சிகளை மதிக்கத்தக்கவை அவர்களது போராட்ட அர்பணிப்பினை பாராட்டத்தக்கவை. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் ஆரம்பத்தில் அமெரிக்க தீர்மானத்தினை ஒட்டியிருந்தபோதும் தற்போது ஒவ்வொரு முறையும் திசை திருப்பப்பட்டு புதிய புதிய இலக்குகள் நிர்ணயிக்கப்படுவது அவதானிக்கப்படக்கூடியதாக உள்ளது.அதனை அவர்களது ஒவ்வொரு தீர்மான அறிக்கைகளும் வெளிக்காட்டுகின்றன. இன்னமும் எது வரை அவர்களின் போராட்டம் தொடரும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டினை காணமுடியவில்லை. அவர்கள் எத்தனை காலம் தமது கல்வியை போராட்டத்திற்காக அர்ப்பணிக்கமுடியும் எனபதும் இங்கு கேள்விக்குறி. முழுமையான போராட்டமாக அமையாமல் பகுதியான போராட்டமாக இனி இது அமைவதே சிறப்பானதாக இருக்கும்.மாணவர்கள் சரியான வகையில் வழிநடத்தப்படவேண்டும் இல்லாவிடில் அதன் பிரதிபலன் பிரச்சினைக்குரியதாக இருக்கும்.

இறுதியாக ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இரண்டு தடவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றிய அமெரிக்காவும் தெற்கு ஆதரவாக வாக்களித்த இந்தியாவும் இலங்கையில் மக்கள் கொல்லப்படுவதற்கும் புலிகளின் தலைமையினை அழித்து போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவருவதிலும் குறியாக இருந்தன. அதை யாராலும் மறுக்கமுடியாது. இலங்கையில் பிரச்சனை இருக்கவேண்டும் என விரும்பும் இந்த நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் தனிநாட்டுக்கோரிக்ககையினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டா. யதார்தத்தினை உணர்ந்து தந்திரோபாய அரசியலை முன்னகர்த்தவேண்டும்.

ஈழத்தமிழரின் தனிநாட்டுக்கோரிக்கை உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் இங்கு நாம் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் இன ரீதியான பாரபட்சங்களுக்கும் எதிராக குரல்கொடுத்து எமது உரிமைகளை பெற இயலுமான சாத்தியமான வழிகளில் முயற்சிக்கின்றோம். இனரீதியாக பல இடங்களில் நாம் சீண்டப்படுக்கின்றமையும் உண்மை. அது தற்போது இலங்கையில் முஸ்லிம்களின் பக்கம் கூடுதலாக திரும்பியிருக்கிறது.அதனை அந்தச்சமூகம் கூட விரைவில் உணரும்.இங்குள்ளவர்களின் மனதில் மட்டும் உள்ளதை அயல்நாட்டிலும் புலம்பெயர்ந்தும் வாழ்பவர்கள்  வெளிப்படையாக தனிநாட்டுக்கோரிக்கையாக முன்வைத்தவண்ணம் உள்ளனர். இதில் எதுவும் இறுதி இலக்கினை உடனடியாக அடையப்போவதில்லை என்பதே யதார்த்தம். மனிதரை மனிதன் மதிக்கும் மனப்பாங்கு சகலரிடமும் உருவாகும் வரை போராட்டங்கள் தொடரும்.வருடங்களும் நகரும்.ஆம் புன்னகை எங்கே மறுக்கப்படுகின்றதோ அங்கே போர் தொடங்குகிறது என்பதை சகல அரசுகளும் உணரவேண்டும்

எது எப்படியோ 2009 நடந்த துயரச்சம்பவங்கள் எம்மிடமிருந்து மறந்துபோக நிறைய வருடங்கள் எடுக்கும். அதை மறப்பதற்கு அரசு விடுமா என்பது தான் இப்போதுள்ள கேள்விக்குறி. அரசின் வெற்றிக்கொண்டாட்டங்கள் நினைவுச்சின்னங்களே எமக்கு அவற்றினை நினைவுபடுத்துகின்றன என்பதை அரசு உணர மறுக்கிறது.நாம் அதை மறந்தால் அரசு சீண்டுவதை நிறுத்தினால் நிச்சயம் நல்லிணக்கம் மலரும். இதனை போராட்டங்களை செய்வோர் முக்கியமாக வலியுறுத்தவேண்டும். அதற்காக முற்றுமுழுதான எதிர்ப்பரசியல் எதையும் தராது.