வணக்கம் உறவுகளே!

கட்டற்ற இணைய யுகத்தில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வலைப்பதிவு வழிகோலியுள்ளது.இதன் மூலம் எனது மனதில்பட்டவற்றினையும் எனது ஞாபகங்களையும் உங்களுடன் பகிர்வதில் மனநிறைவடைகின்றேன்.

கடந்த வாரம் இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகமாணவர் பிரச்சனை தொடர்பான பதிவு ஒன்று மாணவர்களிடையே குழப்பத்தினை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றது என நான் கருதுகின்றேன். பலர் பல்கலைக்கழகத்தினை தமது தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்துவதற்காக மறைமுகமாக தொழிற்படுகையில்அதற்கு இப்பதிவு துணைபோவதாகவே படுகிறது

கல்விக்கு ஒழுக்கம் பேணப்படவேண்டியது முக்கியம்

எங்கு தவறு நிகழ்ந்தாலும் தண்டணை வழங்கப்படவேண்டும் என்பதும் அவை தட்டிக்கழிக்கப்படக்கூடாது என்பதும் முக்கியம் அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இதில் யாரும் விதிவிலக்கல்ல. மாணவர்களுக்கு அநீதி நடைபெற்றிருந்தால் அதை தட்டிக்கேட்டு இறுதி வரை பின்வாங்காமல் நீதி கேட்க வேண்டியது முக்கியம் .அதை அவர்கள் செய்யாதிருந்தால் அவர்களின் இயலாமை.பிறகெதற்கு ஒன்றியங்கள்?. அவரவர் பிரச்சனையினை அவரவர் சாரந்த சமூகங்கள் தட்டிக்கேட்பது பொருத்தமானதே! மற்றையதரப்பினர் கேட்கவேண்டும் என எண்ணுவது கையாலாகாத்தனம்!
.
இதேபோல விரிவுரையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பின் அவர்களுக்கும் நீதி வழங்கப்படவேண்டியது அவசியம். அவர்களது ஒன்றியங்களது கடமையும் கூட .பாவம் எதிர்காலம் பாதிக்கப்படும் அது மதுவெறியில் இடம்பெற்றது வழமையாக இடம்பெற்றது என்று எல்லாம் காரணம் சொல்லி தண்டணையில் இருந்து தப்ப முடியாது .நெற்றிக்கண் காட்டினும் குற்றம் குற்றமே!

மாணவர்கள் குறித்த சம்பவ நாள் அன்று அடாவடி செய்தவேளை அவதானித்துக்கொண்டிருந்த பாதுகாப்பு கொடுக்க முற்பட்ட ஆண் பெண் விரிவுரையாளர்கள் கூட தகாத தூசண வார்த்தைகளால் பேசப்பட்டனர் உருளைக்கட்டடைகளால் தாக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு தடுக்கப்பட்டனர் என அறியமுடிந்தது. இதனை எந்தஒரு மனச்சாட்சி உள்ள மனிதரும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏன் வம்பு என்று இன்னும் பல பெண் விரிவுரையாளர்கள் முறைப்பாட்டினை பதிவுசெய்யாமல் பின்னடித்துகொண்டிருக்கின்றதாகவும் அறியவருகின்றது

இதே விடயம் தென்னிலங்கையில் இடம்பெற்றிருந்தால் குறித்த மாணவர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டிருப்பர். ஒழுக்கம் எங்கு பிறழ்வு பட்டாலும் உரிய தண்டணைவழங்கப்படவேண்டும். தயவு செய்து இந்த பல்கலைநாதம் கணக்கினை நடாத்துபவர்கள் பொறுப்புணர்வுடன் தொழிற்படவேண்டும்.

ஒழுக்கத்தினை மீறி காட்டுமிராண்டித்தனமாக தொழிற்படும் இவர்கள் எப்படி நாளைய தலைவர்களாக முடியும்? எப்படி மக்களுக்கு அதிகாரிகளாக சேவை செய்ய முடியும்? எப்படி இனத்தின் அரசியல் இருப்பினை தீர்மானிக்கமுடியும். ? சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அவர்களுக்காக ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது.

இதேவேளை மாணவர்களின் பிரச்சனையினை எப்படியாவது தமக்கு சாதகமாக்கிகொள்ள அரசில்வாதிகள் காத்திருப்பதால் என்னவோ ஊடகங்கள் பெரிதுபடுத்தவில்லை என நம்புகின்றேன்.

தாமதிக்கப்பட்ட நீதியும் மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது!
கல்வியே எங்கள் மூலதனம்

குறிப்பு:- கடந்த வருடம் மாணவர்கள் காவல்துறையினரால் படைத்தரப்பால் தாக்கப்பட்டபோது மாணவர்களுக்காக ஒட்டுமொத்த பல்கலைக்கழக சமூகமே குரல் கொடுத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

”ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” -வள்ளுவர்.

0 comments

கருத்துரையிடுக