80களில் ஈழப்பிரச்சனை தீவிரமடைந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்களின் செயல் பாட்டை மிகுந்த கோபத்தோடு விமர்சனம் செய்தேன்.
”அமிதாப் பச்சனுக்கு அடிபட்டு விட்டதென்றால் அலறிக் கொண்டு ஓடுகின்றார். இலங்கையிலே பட்டப்பகலில் நட்ட நடுத்தெருவில், வெட்டொன்று துண்டிரண்டாய் விழுந்து கொட்டு கொட்டென்று கொட்டும் குருதியிலே தமிழ் கடந்து கோசங்கள் போடுவதும் வஞ்சமறியாத பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சினை பெய்த அம்பு நீண்டு கிழிப்பதையும் பார்த்த பின்பும் கேட்ட பின்பும் ஓர் அதட்டல் போடக்கூட உனக்கு அவகாசம் இல்லை யென்றால் சரியாடி பராசக்தி’ என்று கேட்டேன்.
இந்திரா காந்தியையே அப்படி கேட்டிருக்கிறேன். இன்றைக்கு இருக்கிறவர்களை கேட்பதற்கு என்ன வார்த்தை இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். இந்திராகாந்தி அவர்கள் மட்டும் இன்னும் கொஞ்ச காலம் இருந்திருப்பார்களே ஆனால் பிற்காலத்திலே அவர்களுடைய அணுகு முறையிலே பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கும். இன்றிருக்கிற மத்திய அரசைப் பற்றிய என்னுடைய கவலையெல்லாம் இவர்கள் யாரும் ஈழத் தமிழர்களை கைதூக்கி விடவேண்டிய அவசியமில்லை.அவர்களோடு கைகுலுக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை. எதிரிகளின் கையில் ஆயுதங்களைக் கொடுக்காமல் இருந்தால் அதுவே எங்கள் தமிழ் ஈழத்திற்கு செய்கிற பெரிய உதவி.
0 comments